நான் காங்கிரஸ்காரன்! என்னை எப்படி திருமாவளவன்.. காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணி!
சென்னை: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த என்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள் என தெரியவில்லை என விசிக சார்பில் காட்டுமன்னார்கோவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிமணி பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிமணி கூறியிருப்பதாவது: காட்டுமன்னார்கோவில் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட நான் விருப்பமனு அளித்திருந்தேன்.

ஆனால் வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. திமுக கூட்டணியில் காட்டுமன்னார்கோவில் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கவில்லை. மாறாக அந்த கூட்டணியில் உள்ள விசிகவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் திடீரென என்னை காட்டுமன்னார்கோவில் தொகுதி வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நான் தற்போது காங்கிரஸ் கட்சியில்தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்னை எப்படி வேட்பாளராக அறிவித்தார்கள் என தெரியவில்லை. திமுக கூட்டணியில்தான் காங்கிரஸும் விசிகவும் உள்ளது.
எனக்காக விட்டுக் கொடுங்கள் என காங்கிரஸ் தலைமை கேட்டிருக்கலாம். அல்லது தலைவர்கள் எடுத்த முடிவால் இது எனக்கு கிடைத்திருக்கலாம். நான் எதில் போட்டியிடுகிறேன், எப்படி போட்டியிடுகிறேன் என்று எனக்கு இதுவரை தகவல் வரவில்லை.
இந்த தொகுதியை திருமாவளவன் கொடுத்து அவர்கள் சின்னத்தில் போட்டியிட சொல்கிறாரா? இல்லை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட சொல்கிறாரா? என எனக்கு தெரியவில்லை. காங்கிரஸ் தலைவரும் விசிக தலைவரும் ஒன்று சேர்ந்து என்ன முடிவை சொல்கிறார்களோ? அதன்படி செயல்படுவேன் என ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் விசிகவுக்கு காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதி ஒதுக்கப்பட்டது. அந்த தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுவார் என சொல்லப்பட்டது. ஆனால் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகுகிறேன் என அறிவித்திருந்தார்.
தனக்கு பதில் விசிக வேட்பாளராக ஜோதிமணி களமிறங்குவார் என அறிவித்தார்.71 வயதான ஜோதிமணி மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்தவர். ஜோதிமணியின் தந்தை பெயர் இளையபெருமாள். இவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நீண்டகாலம் போராடியவர். அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டின் முதல் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராகவுவும் இருந்தார். ஒருமுறை எம்எல்ஏவாகவும், 4 முறை எம்பியாகவும் இருந்தார்.












Click it and Unblock the Notifications