ராகுல் போராட்டம் மடைமாற்றம்? "சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்” : செல்வப்பெருந்தகை
சென்னை: தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள நிலையில், அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். சசிகாந்த் செந்தில் உண்ணாவிரத போராட்டத்தை கைவிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையாததால் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு என வர வேண்டிய தொகையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு திமுக அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் தமிழக மாணவர்களுக்கான கல்வி நிதியை வழங்காத மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில், காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

தமிழகத்திற்கான கல்வி நிதி ரூ. 2 ஆயிரத்து 152 கோடியை மத்திய அரசு வழங்காததை கண்டித்து திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், உண்ணாவிரத போராட்டத்தின்போது சசிகாந்த் செந்தில் எம்.பி.க்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ரத்த அழுத்தம் குறைந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அங்கும் அவர் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "வாக்கு திருட்டு நடைபெற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராடி வருகிறார். இந்த வாக்குத் திருட்டை கண்டித்து மக்களிடம் மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பாஜக தலைவர்களே தவறு நடைபெற்றுள்ளது என ஒப்புக்கொண்டுள்ளனர். ராகுல் காந்தியின் போராட்டத்தை அனைத்து மாநிலங்களிலும் பாராட்டி வருகிறார்கள்.
என்னைப் பொறுத்தவரை திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் இந்த உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும். நாடு முழுவதும் ஓட்டு திருட்டு விவகாரம் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் அதனை மடைமாற்றம் செய்கிறோமோ என்ற அச்சம் இருக்கிறது. ராகுல் காந்தியை முன்னிறுத்தி நாம் இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். உங்கள் உண்ணாவிரதத்தை இதோடு முடித்துக் கொள்ளுங்கள். நல்ல நோக்கத்தோடு போராட்டத்தில் ஈடுபட்டாலும், அதற்கான தருணம் இது இல்லை. ராகுல் காந்தியின் போராட்டத்தை மக்கள் பேசும் தருணத்தில் அதற்கு நாமே இடையூறாக இருக்கக்கூடாது.
வருகின்ற 7ஆம் தேதி திருநெல்வேலியில் வாக்கு திருட்டு தொடர்பாக ஒரு மாநாடு நடத்த உள்ளோம். அந்த மாநாட்டில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் உள்ளவர்களுக்கு கடைசியாக இருக்கும் ஒரே உரிமை வாக்குரிமை மட்டும் தான். அதனை பறிக்க தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டு வருகிறது.
வாக்கு திருட்டு தொடர்பான செய்திகள் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை வேறு வகையில் மாற்றம் செய்து விடுவார்களோ எனவும் அச்சம் ஏற்படுகிறது. ஆகவே, ராகுல் காந்தியை முன்னிறுத்தி அவர் எடுக்கும் போராட்டத்திற்கு நாம் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும். வரும் தேர்தல்களில் மின்னணு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்கு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும். அந்த இயந்திரம் கண்டுபிடித்த நாட்டிலேயே வாக்குச்சீட்டு முறைதான் பயன்படுத்தப்படுகிறது.
பலம் கொண்டு கட்சிகள் இருக்கும் மாநிலங்களில் தங்களது கைவரிசையை பாஜகவால் காட்ட முடியாது. குறிப்பாக ஹிந்தி பேசும் மாநிலங்களில் தங்களுடைய சித்தாந்தத்தை பாஜகவினர் காட்டி வருகின்றனர். ஆனால் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அவர்களால் ஏதும் செய்ய முடியாது. வாக்குச்சீட்டு முறை கொண்டு வருவதற்கு நடைமுறை சிக்கல் எதுவும் கிடையாது. இதற்கு முன்பு பல்வேறு தேர்தல்களில் வாக்கு சீட்டு முறைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications