கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்..மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
சென்னை: இதய நோய் காரணமாகவும் கொரோனா தொற்று பாதிப்பினாலும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். 38 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு சட்டசபைக்குள் எம்.எல்.ஏ.வாக நுழைந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

கடந்த மார்ச் 15ஆம் தேதியன்று ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலையை டாக்டர்கள் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதற்கிடையே சில பரிசோதனைகளும் அவருக்கு செய்யப்பட்டது. இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. ஈவிகேஎஸ் இளங்கோவனை கடந்த வாரம் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு ஓரிரு நாட்களில் இளங்கோவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்தது. இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு லேசான கொரோனா தொற்று பரவியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு காரணமாக அவருடைய நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக கடந்த சில நாட்களுக்கு ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இதய பாதிப்பு இருப்பதால் அவர் சில நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தனது உடல் நலம் குறித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் அளிக்கப்பட்டுள்ள உடையில் இருக்கும் இளங்கோவன்..நான் நல்லா இருக்கேன்..சீக்கிரம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன் என்று வீடியோ மூலம் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார். இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் மாற்றப்பட்டார். இன்றைய தினம் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை அடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவன் வீடு திரும்பினார். கடந்த 22 நாட்கள் சிகிச்சை பெற்று வந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று நலமுடன் வீடு திரும்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications