சாமானிய மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டது! செல்வப்பெருந்தகை அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!
சென்னை: சாமானிய மக்களை மத்திய அரசு ஏமாற்றிவிட்டதாக தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார்.
100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதியை குறைத்து காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்வதாக வேதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;

வளர்ச்சிப் பாதை
''மத்தியில் பா.ஜ.க. அரசு பதவியேற்ற பிறகு அதன் சமூக, பொருளாதாரக் கொள்கையினால் நாடு வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னோக்கி போய் கொண்டிருக்கிறது. பணமதிப்பிழப்பு மற்றும் தவறான ஜி.எஸ்.டி. நடைமுறையினால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மிகப் பெரிய அழிவை சந்தித்துள்ளன. மேலும், பல இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.''

வேலை வாய்ப்பு
''இன்றுவரை எத்தனை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது பற்றி கேள்விக்கு தெளிவான எந்த பதிலும் இல்லை. அதே நேரத்தில் இந்த நிதிநிலை அறிக்கையில் 5 ஆண்டுக்கு 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்கிறார்கள். ஆனால், ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று 35ஆயிரம் ரயில்வே பணிக்கு, விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடியே 25லட்சம் பேர். பா.ஜ.க. அரசு எத்தனை வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கி இருக்கிறார்கள் என்று இதிலிருந்து தெரிகிறது.''

நிதி நிலை அறிக்கை
''நாட்டில் அரசு மற்றும் தனியார் வேலையில் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் ஆகியோரின் எதிர்பார்ப்பான வருமானவரி சலுகையை புறந்தள்ளியுள்ளது பா.ஜ.க. அரசு. இதுமட்டுமல்லாமல் ஏழைகள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்கள் அனைவருக்கும் ஏமாற்றம் தரும் நிதிநிலை அறிக்கையாக இது இருக்கிறது.''

திட்டம் இல்லை
''நடப்பு நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே பத்திரப்பதிவு' என்ற ஒன்றை புதிதாக அறிவித்திருக்கிறார் நிதியமைச்சர். இது மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்கும் செயலாக உள்ளது. ஒன்றிய அரசு எந்தவொரு திட்டத்தை அறிமுகப்படுத்தினாலும் அது மாநில அரசுகளின் உரிமைகளிலும், அதிகாரத்திலும் தலையிடுவதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு பயன்படும் எந்தத் திட்டமும் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லை.''

காங்கிரஸ் ஆட்சி
''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டு வந்த திட்டமான, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு கடந்த ஆண்டு ரூபாய் 98 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு ரூபாய் 73 ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது. இத்திட்டம் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வாழ்வாதாரத்திற்கு இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் உதவியாக இருந்தது.''
Recommended Video

வெற்றி அறிவிப்பு
''ஆனால், பா.ஜ.க. அரசு மத்தியில் பதவியேற்றதில் இருந்து இந்தத் திட்டத்தை நீர்த்துப்போக செய்யக்கூடடிய அனைத்து வேலைகளையும் செய்கிறது. அதற்கு உதாரணமாக இந்த நிதிநிலை அறிக்கையில் ஏறத்தாழ 25 சதவீதம் இத்திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் வாழும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை முன்னேற்றுவதற்கான எந்த திட்டமும் இல்லாத வெற்று அறிக்கையாக இருக்கிறது.''












Click it and Unblock the Notifications