ராகுல் மவுசு அவ்வளவுதான்.. தமிழகத்தில் பிரச்சாரம் செய்த அத்தனை தொகுதியிலும் காங்கிரஸ் தோல்வி!
சென்னை: தமிழகத்தில் காங்கிரஸ் முன்னணி தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்பே, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ஒருவித இணக்கம் இல்லாத சூழல் வெளிப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி 73 இடங்களில் வென்றுள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 234 தொகுதிகள் கொண்ட தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை எனும் போதில் தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும், 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ள தனிப்பெரும் கட்சியாக இருந்து வருகிறது.

இதன் அடிப்படையில், தவெக ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரலாம். அதனை ஏற்று ஆளுநர் தவெகவை ஆட்சி அமைக்க அழைத்து, பெரும்பான்மை நிரூபிக்க கால அவகாசம் வழங்கலாம். காங்கிரஸ், பாமக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை விஜய் கோரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தவெகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி எம்.பி, தேர்தல் முடிவுகள் குறித்து மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோருடன் பேசியதாகவும், அதேபோல், தவெக தலைவர் விஜய்க்கு வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சிகளில், திமுகவுக்கு அடுத்தபடியாக அதிக இடங்களில் போட்டியிட்டது காங்கிரஸ் தான். 2021 தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட அந்த கட்சி, இந்த தேர்தலில் தவெகவுடன் கூட்டணி சேரப்போவதாக பேரம் பேசி, திமுகவிடம் 3 தொகுதிகளை அதிகமாக வாங்கியது. இந்த முறை 28 சட்டசபை தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட்டை பெற்றது காங்கிரஸ்.
மொத்தம் 28 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், 5 தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 23 தொகுதிகளில் தோல்வி அடைந்துள்ளது. குறிப்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்த 6 தொகுதிகளிலும் அக்கட்சியின் வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
பொன்னேரி, சோளிங்கர், துறையூர், கன்னியாகுமரி, நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 6 தொகுதிகளில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்திருந்தார் ராகுல் காந்தி. இந்நிலையில், இந்த 6 வேட்பாளர்களுமே தோல்வி அடைந்துள்ளனர்.
பொன்னேரி, சோளிங்கர், துறையூர், நாங்குநேரி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் தவெக வேட்பாளர்களிடம் தோல்வி அடைந்துள்ளனர். சில இடங்களில் 3வது இடத்துக்குச் சென்றுள்ளனர். கன்னியாகுமரி சட்டசபை தொகுதியில் திமுக வேட்பாளர் தோல்வி அடைந்துள்ளார்.
இதேபோல, கடந்த ஆண்டு பீகாரிலும் ராகுல் காந்தி மேஜிக் சுத்தமாக வொர்க் அவுட் ஆகவில்லை. பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி சுமத்திய "வாக்கு திருட்டு" குற்றச்சாட்டு வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications