70 ஆயிரம் மருத்துவர்கள் தேவைப்படும் தமிழகத்தில்... 18 ஆயிரம் மருத்துவர்கள் தான் உள்ளனர் -காங்கிரஸ்
சென்னை: ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு 70 ஆயிரம் மருத்துவர்கள் தேவைப்படுவதாகவும் ஆனால் இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள் தான் எனவும் கூறுகிறார் கே.எஸ்.அழகிரி.
புதிதாக தொடங்கப்படும் மினி கிளினிக்குகளில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களை பணி அமர்த்துவதன் மூலம் பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அரசு மருத்துவர்கள்
தமிழக அரசு மருத்துவர்கள் அரசுக்கு நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து பலகட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன்படி, மருத்துவர்களுக்கு தகுதிக்கு ஏற்ற ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவப் பணியிடங்கள், மருத்துவ பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இடங்கள், மருத்துவ பட்ட மேற்படிப்பு முடிக்கும் அரசு மருத்துவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை இதுவரை தமிழக அரசு நிறைவேற்றாதது மிகுந்த வேதனையை அளிக்கிறது.

முதல்வருக்கு அழகா?
தமிழக முதல்வர் அறிவித்த, கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50 லட்சம் நிவாரணம், தொற்று ஏற்பட்ட மருத்துவர்களுக்கு ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டதற்காக மருத்துவர்களுக்கு ஒரு மாத சிறப்பு ஊதியமும் இதுவரை தரப்படாமல் கிடப்பில் போடப்பட்டள்ளது. முதலமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத நிலையிலும் அரசு மருத்துவர்கள் தங்களது பணியில் அயராது பணியாற்றி வருகிறார்கள்.

18 ஆயிரம்
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின்படி, ஆயிரம் பேருக்கு ஒரு மருத்துவர் என்ற வகையில் 7 கோடி மக்கள் தொகைக்கு தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 70 ஆயிரம் மருத்துவர்கள் இருக்க வேண்டும். இருப்பதோ 18 ஆயிரம் மருத்துவர்கள் தான். ஆனால், தமிழக முதலமைச்சர் 11 புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பது குறித்தும், 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்குவது குறித்தும் தேர்தலை மனதில் கொண்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறார். இதுபோன்ற அறிவிப்பால் மக்களுக்கு என்ன பயன் ஏற்படப் போகிறது ?

எச்சரிக்கை
2 ஆயிரம் மினி கிளினிக்குகளுக்கு குறைந்தபட்சம் 3 ஆயிரம் மருத்துவர்களாவது நியமனம் செய்யப்பட வேண்டும். இதற்காக ஏற்கனவே ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை இங்கே அமர வைப்பதன் மூலம் மொத்த பொது சுகாதார கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.











Click it and Unblock the Notifications