4 ரூபாய் போதாது என்றேன்.. கருணாநிதி 10 ரூபாய் கொடுத்தார்.. நன்றியுடன் நினைவுக்கூறும் குமரி அனந்தன்!
சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார்.
பனையில் புதிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றியை அவர் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வு ஒன்றை நன்றியுடன் நினைவுகூர்ந்துள்ளார்.
'பீகாரில் கொரோனா 3வது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது..' முதல்வர் நிதீஷ் குமார் பரபர பேச்சு
ரூ.50 லட்சம்
''பனையில் புதிய ஆராய்ச்சி செய்வதற்கு 50 லட்சம் ரூபாய் முதற்கட்டமாக ஒதுக்கியுள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். 'பனை கற்பகத்தரு' எனப் போற்றப்படுவது அதன் ஓலையில் திருக்குறளை வள்ளுவர் எழுதினார். சங்ககால நூல்கள் பனை ஏடுகளில் எழுதப்பட்டன. இன்றைய முதல்வரின் தந்தை கலைஞர் கருணாநிதி அவர்கள் எனக்கு பனைத் தொழில் வாரியத் தலைவர் பொறுப்பளித்தார்.''
பத்து ரூபாய்
''இதுவரை 70 அடிகளும், அதற்கு மேலும் வளர்ந்த பனை மரத்திலிருந்து காலை ஒரு வேளையும், மாலை ஒரு வேளையும் ஏறி எடுக்கும் பதநீருக்கு அரசு லிட்டருக்கு 4 ரூபாய் வீதம் கொடுத்து வந்தது. நான் முதல்வர் கலைஞரிடம் 4 ரூபாய் போதாது கூடுதல் கொடுக்க வேண்டும் என்று கேட்டேன். பதநீர் லிட்டர் பத்து ரூபாய்க்கு அரசு வாங்கிக் கொள்ளும் என்ற அமுத வாக்கை ஆணையாக்கினார்கள்.''
பனையின் சிறப்பு
''அந்த பெருமைமிகு தலைவருடைய மகன் முதல்வர் ஸ்டாலின் பனையில் புதிய ஆய்விற்குத் திட்டமிடுவது மிகவும் போற்றுதலுக்குரியது. நான் பல்லாண்டுகளாக காண் அட்டையை பனையிலேயே பொறித்துக் கொண்டுள்ளேன். அழைப்பிதழ் போன்றவற்றையும் பனை ஓலையில் பொறிக்கிறேன். பிறரும் இவ்வாறு செய்யலாம்.''
குமரி அனந்தன்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ஆளுநரின் தந்தை, காந்தி பேரவை தலைவர் என பல்வேறு சிறப்புகளை கொண்ட குமரி அனந்தன், பனை மேம்பாடுக்காக தன் வாழ்நாள் முழுவதும் உழைத்துவருகிறார். பனை பொருட்களை மக்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்க்க தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். ரேஷன் கடைகளில் பனை வெல்லம் வழங்கப்படுவதற்கு குமரி அனந்த முன்னெடுத்த முயற்சியே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் பனை மரங்களை வெட்ட அரசு கடிவாளம் போட்டதற்கும் இவரது கோரிக்கையே முக்கிய காரணமாகும்.