திடீர் திருப்பம்.. விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் சந்திப்பு! கூட்டணி பற்றி பேசியதாக பேட்டியில் சூசகம்
Recommended Video
சென்னை: தமிழக தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தைகளின், திடீர் திருப்பமாக, தேமுதிக தலைவர் விஜயகாந்தை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசப்பட்டதாக திருநாவுக்கரசர் பின்னர் நிருபர்களிடம், சூசகமாக தெரிவித்தார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதற்கு தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தேமுதிக கேட்கக்கூடிய தொகுதிகளை அதிமுக தரப்பு ஒதுக்க தயாராக இல்லை என்பதால் இந்த இழுபறி நீடித்து வருகிறது.
திடீர் சந்திப்பு
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை 11.50 மணியளவில், சாலிகிராமம் பகுதியில் உள்ள விஜயகாந்த் வீட்டுக்கு சென்றார். விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக திருநாவுக்கரசர் சென்றதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தல்
ஆனால் கடந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில், தேமுதிக கைகோர்க்கும் என்று அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி பெரிதும் எதிர்பார்த்தார். ஆனால் விஜயகாந்த் கட்சி, வைகோ உள்ளிட்டோர் அடங்கிய மக்கள் நல கூட்டணி உடன் கை கோர்த்தது.
திமுக கூட்டணி
இந்த நிலையில் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்துள்ளார். இவர் திமுக கூட்டணிக்கு விஜயகாந்தை கொண்டு வந்து சேர்ப்பதில், முக்கிய பங்காற்ற கூடும். திருநாவுக்கரசர், விஜயகாந்த்தின் திரையுலக காலத்தில் இருந்தே நண்பர் என்பதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
அரசியல் சூழல்
பிறகு நிருபர்களிடம், திருநாவுக்கரசர் கூறியதாவது: விஜயகாந்த்தின் உடல் நலம் விசாரித்தேன். உடல் நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. 35 ஆண்டுகளாக எனக்கு விஜயகாந்த் நண்பர். அவர், அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த பிறகு இன்றுதான் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. இன்னும் பூரண குணமடைந்து வர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். பிரார்த்திக்கிறேன். விஜயகாந்த், துணைவியார், மைத்துனருடனும் பேசினேன். இருவருமே அரசியல்வாதிகள்தான்.. எனவே தேர்தல் குறித்தும் பேசினோம். அரசியல் பேசவில்லை என்று சொன்னால் அது பொய்யாகாதா? இவ்வாறு திருநாவுக்கரசர் தெரிவித்தார்.