கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள்.. நீதிபதி கருத்தை நீக்கக் கோரிய 23 வக்கீல்கள் மீது.. அவமதிப்பு புகார்
சென்னை: கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் குறித்து தெரிவித்த கருத்தை நீக்க கோரி நீதிபதி வைத்தியநாதன் முன் முறையிட்ட விவகாரம் தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை உள்ளிட்ட 23 வழக்கறிஞர்களுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி வழக்கறிஞர்கள் அரசு தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்துள்ளனர்.
கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளதாக பெற்றோர்கள் கருதுவதாகவும், பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள் அப்பாவி ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதாகவும் நீதிபதி வைத்தியநாதன் தீர்ப்பு ஒன்றில் கருத்து தெரிவித்தார்.

இதை எதிர்த்து பெண்கள் மற்றும் கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை இனி நீதிபதி வைத்தியநாதன் முன்பு பட்டியலிட கூடாது என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வைகை உள்ளிட்ட 64 வழக்கறிஞர்கள் புகார் மனு அளித்திருந்தனர்.
தங்களுடைய சொந்த கருத்துக்களை வெளிப்படுத்தும் தளமாக நீதிமன்றங்களை நீதிபதிகள் பயன்படுத்தி கொள்ள கூடாது என உச்சநீதிமன்றம் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ள நிலையில் நீதிபதி வைத்தியநாதன் மட்டுமல்லாமல் நீதிபதி கிருபாகரனும் இதே போன்று வழக்கிற்கு சம்பந்தமில்லாத கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இதற்கிடையில், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துகளை நீக்க வைகை உள்ளிட்ட வழக்கறிஞர்கள் நீதிபதி வைத்தியநாதனிடம் முறையிட்டனர். இதையடுத்து நீதிபதி வைத்தியநாதன் இந்த கருத்துக்களை நீக்கினார்.
வழக்கறிஞர்களின் இந்த செயல் நீதிமன்ற அவமதிப்பு செயலாக கருதி வைகை உள்ளிட்ட 23 வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி அரசு தலைமை வழக்கறிஞரிடம், வழக்கறிஞர் செளந்தரராஜன் சார்பில் வழக்கறிஞர்கள் ராமமூர்த்தி, பாபு, அஸ்வதாமன் ஆகியோர் மனு அளித்துள்ளார். இந்த மனு வரும் வெள்ளிக்கிழமை விசாரிக்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications