”முட்டாள்” கொஞ்சம்கூட அறிவேயில்லையா? முருங்கைக்காய் கட்டுடன் வந்த கூல் சுரேஷ்! வெளுத்த நெட்டிசன்கள்
சென்னை: மறைந்த இயக்குநர் பாக்யராஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர் கூல் சுரேஷ் தனது கையில் முருங்கைக்காய் கட்டுடன் வந்திருந்தார். பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான 'முந்தானை முடிச்சு' திரைப்படத்தின் நினைவாகவே அவர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியதாகச் சொன்னாலும், சமூக வலைதளங்களில் அவருக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. வெற்று விளம்பரத்துக்காக அவர் இதுபோன்ற முட்டாள்தனமாக காரியத்தைச் செய்துள்ளதாக கொந்தளிக்கின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாக்யராஜ் திடீர் மாரடைப்பால் காலமானது திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று அவரது இறுதி ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், அரசு மரியாதையுடன் பெசன்ட் நகர் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

தமிழ் சினிமாவில் குடும்பக் கதைகள், நகைச்சுவை, சமூக கருத்துகள் ஆகியவற்றை எளிமையாகவும், விறுவிறுப்பாகவும் திரையில் கொண்டு வந்த இயக்குநர்களில் முக்கியமானவர் பாக்யராஜ். நடிகராகவும், வசனகர்த்தாவாகவும், தயாரிப்பாளராகவும் தனக்கென தனி முத்திரையை பதித்தவர்.
சமீபத்தில் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமண விழாவில் கலந்து கொண்டிருந்த பாக்யராஜ், நேற்று இரவுதான் சென்னை திரும்பியிருந்தார். இன்று (சனிக்கிழமை) காலை வழக்கம்போல் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் உயிரிழந்தார்.
அவரது மறைவு செய்தி வெளியாகியதும் திரையுலகினர் மட்டுமல்லாமல், பல தலைமுறை ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள வெள்ளாங்கோயிலில் 1953-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி பிறந்த பாக்யராஜ், ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 1979-ஆம் ஆண்டு வெளியான 'சுவரில்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.
அதன்பிறகு 'முந்தானை முடிச்சு', 'அந்த 7 நாட்கள்', 'இன்று போய் நாளை வா', 'சின்ன வீடு', 'டார்லிங் டார்லிங் டார்லிங்' உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியும், நடித்தும் ரசிகர்களின் மனதில் தனி இடத்தைப் பிடித்தார். அவரது திரைப்படங்கள் குடும்ப உறவுகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான காட்சிகள் மற்றும் வலுவான திரைக்கதைகளுக்காக இன்றும் பேசப்படுகின்றன. நடிகராக மட்டுமல்லாமல், வசன எழுத்தாளர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் என பல்வேறு துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர் பாக்யராஜ்.
பாக்யராஜின் மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல். முருகன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் திரையுலகின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பாக்யராஜின் திரைத்துறைப் பங்களிப்பை கவுரவிக்கும் வகையில் அவரது இறுதிச் சடங்கிற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தும் வகையில் பாக்யராஜின் உடல் இன்று காலை வரை அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் காலை 9.30 மணியளவில் இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஞாயிறு மதியம் 1.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் பாக்யராஜின் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பாக்யராஜின் உடலுக்கு நடிகர் கூல் சுரேஷ் வித்தியாசமான முறையில் அஞ்சலி செலுத்த வந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது கையில் முருங்கைக்காய் கட்டுடன் வந்ததை பார்த்த பொதுமக்களும், ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். பாக்யராஜின் புகழ்பெற்ற "முந்தானை முடிச்சு" திரைப்படத்தை நினைவுகூரும் வகையில்தான் முருங்கைக்காயை கையில் கட்டிக்கொண்டு வந்ததாக கூல் சுரேஷ் விளக்கம் அளித்தார்.
கூல் சுரேஷ் கையில் முருங்கைக்காயை கட்டிக்கொண்டு வந்ததைப் பார்த்த ஊடகத்தினரும் அங்கிருந்தவர்களும் அதன் காரணம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கூல் சுரேஷ், "பாக்யராஜ் சார் என்றாலே 'முந்தானை முடிச்சு' படம் நினைவுக்கு வரும். அந்த படத்தில் முருங்கைக்காய்க்கு முக்கியமான இடம் இருந்தது. அந்த நினைவாகத்தான் இதை கையில் கட்டிக்கொண்டு வந்தேன். இது என்னுடைய மரியாதை" என்று கூறினார்.
ஆனால் அவரது இந்த செயல் சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பை சந்தித்துள்ளது. ஒரு கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் இப்படி வித்தியாசமாம் என்ற பெயரில் வருவது சரியான அணுகுமுறை அல்ல என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். "அஞ்சலி செலுத்தும் நிகழ்வை கூட விளம்பரம் தேடும் மாற்றிவிட்டாரா?", " கேமரா முன் நிற்க வேண்டும் என்பதற்காக எதையும் செய்யலாமா?", "இது மரியாதையா? " என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
சிலர் இன்னும் கடுமையாக, "பாக்யராஜ் போன்ற மூத்த கலைஞரின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கூட மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறேன் என்ற பெயரில் இதுபோன்று செய்வது தேவையற்ற செயல்", "முட்டாள்தனமானது" என்றும் விமர்சித்துள்ளனர். கூல் சுரேஷ் கடந்த சில ஆண்டுகளாக எந்த பொதுநிகழ்ச்சிக்கும் வித்தியாசமான தோற்றத்தில் வருவது வழக்கமாக உள்ளது. திரைப்பட விழாக்கள், நடிகர்களின் பட வெளியீட்டு விழாக்கள், அரசியல் நிகழ்ச்சிகள் என பல இடங்களில் வித்தியாசமான வாசகங்கள், உடைகள் அல்லது பொருட்களுடன் தோன்றுவார். தற்போதும் அதுபோல் தான் செய்துள்ளார் என்கின்றனர்.














Click it and Unblock the Notifications