அதிகரிக்கும் கொரோனா.. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற முதல்வர் ஸ்டாலின் அறிவுரை
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிகரிக்கும் நிலையில் மக்கள் நோய் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்ற முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2ஆவது அலை தீவிரமாக இருந்த நிலையில் அதை எப்படியோ கட்டுக்குள் கொண்டு வந்தது மாநில அரசு. இதையடுத்து மக்களின் ஒத்துழைப்பு மற்றும் மாநில அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகத்தில் 3ஆவது அலை பெரிதாக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
தற்போது ஜூன், ஜூலை மாதங்களில் கொரோனா 4ஆவது அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக கான்பூர் ஐஐடி உள்ளிட்டவை தெரிவித்துள்ளது. இதனால் 4-ஆவது அலை வராமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 219 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,159-ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 129-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 83-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. இதுவரை மொத்தம் 38,025 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 137 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும் என மருத்துவத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தலைமைச் செயலாளர் இறையன்பு, மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை கூட்டம்
இந்த ஆலோசனை கூட்டத்தில் முகக் கவசம் அணிதல், தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா தாக்கம் குறைவாகவே காணப்பட்டாலும் அது அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கும் பொது மக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இதுவரை தமிழகத்தில் 1.60 கோடி பேர் இரு தவணை கொரோனா தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications