ரூ. 1000 கொரோனா ஊரடங்கு நிவாரண நிதி வீடு வீடாக கொடுக்க முதல்வர் உத்தரவு
ரோனா ஊரடங்கு நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை வீடு வீடாக சென்று வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சென்னை: முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ள பகுதிகளில் கொரோனா நிவாரண நிதியாக அறிவிக்கப்பட்டுள்ள 1000 ரூபாயை வீடு வீடாக சென்று வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நோய் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் இன்று இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005ன் கீழ், வரும் 19ஆம் தேதி முதல் அதிகாலை 12.00 மணி முதல் 30ஆம் தேதி இரவு 12 மணி வரை, 12 நாட்களுக்கு பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும் மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் முழு ஊராடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
Recommended Video
இதே போல செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட மாங்காடு மற்றும் குன்றத்தூர் பேரூராட்சி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மௌலிவாக்கம், பெரியபணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் மட்டும் முழு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 1,000 ரூபாய் நிவாரணம் வழங்க நான் உத்தரவிட்டிருந்தேன். அதை செயல்படுத்தும் விதமாக, வரும் 22ஆம் தேதி முதல் சம்பந்தப்பட்ட துறையினர் அரிசி குடும்ப அட்டைதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று, ரொக்க நிவாரணத்தை வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா நோய் பரவலை தடுக்க, தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவுக்கு, பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று முதல்வர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா நிவாரண பொருட்களும், ஆயிரம் ரூபாயும் வாங்குவதற்கு முன்பு டோக்கன் முறை அமல்படுத்தப்பட்டது. ரேசன்கடைகளில் கூட்டம் அலைமோதியது. தற்போது கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில் தற்போது வீடு வீடாக சென்று 1000 ரூபாய் நிவாரண நிதி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications