தமிழகத்தில் கொரோனா வீரியம்..1484 பேருக்கு பாதிப்பு.. 8,970 பேர் சிகிச்சை
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,484 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 736 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். மாநிலம் முழுவதும் 8,970 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா மூன்றாவது அலைக்குப் பிறகு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் வேகமாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. கொரோனா பாதிப்பின் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்டது.
எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,71,289ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் 632 பேருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. செங்கல்பட்டில் 239 பேருக்கும், கோவையில் 70 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 59 பேருக்கும் கன்னியாகுமரியில் 51 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 736 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,24,293 உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடந்த 24 மணி நேரத்தில் யாரும் உயிரிழக்கவில்லை. தமிழகத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 38,026 ஆக உள்ளது. தமிழகம் முழுவதும் 8,970 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணிவது கட்டாயம் என மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications