உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்.. தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தீவிரம்
சென்னை: மத்திய சீன நகரான வுஹான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, கொரோனா வைரஸ். இந்த வைரஸ் தாக்கத்தின் காரணமாக சீனாவில் 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2002 ஆம் ஆண்டு சார்ஸ் (SARS) வைரஸ் உலகம் முழுக்க மிகத் தீவிரமாக பரவி பலரைக் கொன்றது. உலகம் முழுக்க சுமார் 800 பேர் இந்த வைரசால் கொல்லப்பட்டனர். இதுவும் சீனாவில்தான் தொடங்கியது.
அது போன்ற ஒரு வைரஸ் குடும்பத்தை சேர்ந்ததுதான், இந்த கொரோனா வைரஸ் என்று கூறப்படுகிறது. எனவே தான் இப்போது புதிதாக தோன்றியுள்ள இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக சுகாதார நிறுவனத்தின் உதவியை, சீனா நாடியுள்ளது.

சீனா பயணிகள்
இந்த வைரஸ் மூச்சு பிரச்சினையை ஏற்படுத்தக்கூடியது. இந்த வியாதிக்கு, சளி, இருமல் போன்றவை அறிகுறிகளாம். அடுத்த வாரம் சீனாவில் தொடங்கும் சந்திர புத்தாண்டு விடுமுறை நாட்களில், சுமமார் 1.4 பில்லியன் சீன மக்கள் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. எனவே, உலகளவில் இந்த வைரஸ் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சுற்றுலா பயணிகளால் வைரஸ் பரவும் வாய்ப்பு இருப்பதாக உலக நாடுகள் அச்சப்படுகின்றன.

வுஹான் மாகாணம்
அமெரிக்காவில் இருந்து சீனாவின் வுஹான் மாகாணத்திற்கு, ஆயிரக்கணக்கானோர் சென்று வருவதால் சான்பிரான்சிஸ்கோ, நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற விமான நிலையங்களில் சீன பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீனா செல்லகூடிய இந்தியர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தடுப்பு மருந்து
இறைச்சி சந்தைகளின் மூலம் இந்த வைரஸ் பரவுவதாக, கூறப்பட்டாலும் இதுவரை எவ்வாறு பரவுகிறது? அதை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் என்ன என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் தோற்றம் மற்றும் அது எவ்வளவு எளிதில் பரவக்கூடும் என்பது பற்றி அதிகம் அறியப்படவில்லை.
சீனா தவிர, உலகளவில் கிட்டத்தட்ட 50 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. அவர்கள் அனைவரும் வுஹானுக்கு பயணம் செய்திருக்கிறார்கள்.

விஜயபாஸ்கர்
இதனிடையே, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர், விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில், இன்று கூறுகையில், வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு, விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்திதான் உள்ளே அனுமதிக்கிறோம். தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. எனவே மக்கள் கவலைப்படத் தேவையில்லை.

தமிழகம் முன்னிலை
பொதுவாகவே, தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கும். எனவேதான், நிப்பா வைரஸ், எபோலோ வைரஸ் போன்ற காய்ச்சல் பாதிப்புகள் இதற்கு முன்பு வெளிமாநிலங்கள், வெளி நாடுகளில் வந்தபோதிலும்கூட தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications