காய்கறி லாரியில் சென்ற பெண்ணுக்கு தொற்று.. பழகிய 82 பேருக்கும் டெஸ்ட்.. கோவில்பட்டியில் பரபரப்பு!
கோயம்பேடு லாரியில் சென்ற இளம்பெண்ணுக்கு தொற்று உறுதி ஏற்பட்டுள்ளது
சென்னை: காய்கறி லாரியில் ஏறி சொந்த ஊருக்கு போயுள்ளார் ஒரு பெண்.. இப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.. இதுவரை அந்த பெண் 82 பேரிடம் பழகியிருப்பதால், அனைவருக்கும் டெஸ்ட் செய்ய முடிவாகி உள்ளது.. மேலும் அந்த லாரி டிரைவர் எந்த ஊர் என தெரியாததால் அவரையும் தேடி கொண்டிருக்கிறார்கள் போலீசார்!
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் அந்த பெண்.. டைப்பிஸ்டாக் வேலை பார்த்து வந்தார்.. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆதனூர்.

தற்போது ஊரடங்கு என்பதால் அவரால் தொடர்ந்து சென்னையில் உள்ள வீட்டில் இருக்க முடியவில்லை.. சொந்த ஊருக்கு போக ஆசைப்பட்டார்.. இதற்காக வண்டி ஏதாவது கிடைக்குமா என்று தேடியபோதுதான், கடந்த 29-ஆம் தேதி சாயங்காலம் கோவில்பட்டியில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்த காய்கறி லாரி ஒன்று திரும்ப இருந்தது.
அந்த லாரியில் அந்த பெண் ஏறி கொண்டார்.. விடிகாலையில் எட்டயபுரத்தில் இறங்கி தன் சகோதரரை வரவழைத்து அவருடன் ஆதனூருக்கு சென்றார்.. வழக்கம்போல் வீட்டில் எல்லோருடனும் சகஜமாக பேசி புழங்கி உள்ளார்.. பிறகு பெண்ணிடம் அந்த ஊர் மக்கள் சென்னையில் எப்படி, இத்தனை நாள் இருந்தாய் என்று கேட்டனர்.
அதற்கு அந்த பெண், நான் ஒரு மாசத்துக்கு முன்னாடியே கோவில்பட்டிக்கு வந்துட்டேன் என்று சொல்லி சமாளித்துள்ளார்.. எனினும் இவர் மீது சந்தேகப்பட்ட ஊர் மக்கள் தாசில்தாரிடம் சென்று விஷயத்தை சொன்னார்கள்.. அவர் உடனே அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தவும், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது.. அப்போது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதிகாரிகள் ஒரு ஆம்புலன்ஸை உடனடியாக வரவழைத்தனர்.. பெண்ணை சிகிச்சைக்காக கொண்டு செல்ல முயன்றபோது, ஆம்புலன்ஸில் ஏறவே மாட்டேன் என்று பெண் தகராறு செய்துள்ளார்.. ஆம்புலன்ஸில் ஏறாவிட்டாலோ, சிகிச்சைக்கு ஒத்துழைப்பு தரவில்லை என்றால் கைது செய்யப்படும் என்று கண்டிப்புடன் தெரிவித்தனர்.. இதன்பிறகே அந்த பெண் ஆம்புலன்ஸில் ஏறினார்.. சிகிச்சையும் தற்போது நடந்து வருகிறது.
இப்போது சிக்கல் என்னவென்றால், சொந்த ஊருக்கு வந்ததில் இருந்து இதுவரை இவர் 8 மாத குழந்தை உட்பட 82 பேரிடம் பழகியிருக்கிறார்.. அதனால் அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டன.. இதை தவிர, தான் வந்த லாரியில் டிரைவர் மட்டுமே இருந்தாராம்.. அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை என்கிறார். அதனால் அந்த லாரி டிரைவரையும் தேடி கொண்டு இருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications