கொரோனா தடுப்பில் வியப்பளிக்கும் "ராம்நாடு".. 300 கிராமங்களில் ஒரு கேஸ் கூட இல்லை.. ஆச்சர்யம்!
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 300 கிராமங்களில் ஒருவருக்கு கொரோனா கூட ஏற்படவில்லை. மொத்தமாக கொரோனா இல்லாமல் இந்த கிராமங்கள் பாதுகாப்பாக இருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவல் வேகம் எடுத்து வருகிறது. சென்னையில் தினசரி கேஸ்கள் குறைய தொடங்கினாலும், உள் மாவட்டங்களில் கேஸ்கள் அதிகரித்து வருகிறது.
முக்கியமாக கோயம்புத்தூர், மதுரை, பழனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி 1000க்கும் அதிகமான கேஸ்கள் பதிவாகி வருகின்றது. தமிழகத்தின் மொத்த கேஸ்கள் உயர உள்மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள அதிக கேஸ்கள் காரணமாக அமைந்துள்ளது.

எப்படி
உள்மாவட்டங்களில், முக்கியமாக தென் மாவட்டங்களில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் கொரோனா கேஸ்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா முதல் அலையில் இருந்தே ராமநாதபுரத்தில் கொரோனா கட்டுப்பாடு சிறப்பாகவே இருந்தது. அங்கு இதுவரை மொத்தம் 12,498 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

எத்தனை
இதில் 9955 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டனர். 151 பேர் பலியாகிவிட்டனர். மீதம் உள்ளவர்களில் 2392 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் சில வீடுகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இரண்டாம் அலை
கொரோனா இரண்டாம் அலையில் கிட்டத்தட்ட 2000 பேருக்கு ராமநாதபுரத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு தற்போது கிராமம், கிராமமாக சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. அறிகுறி இருக்கும் மக்களை தனிமைப்படுத்தி சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. ராமநாதபுரத்தில் மொத்தம் 429 கிராமங்கள் உள்ளன.

கிராமங்கள்
இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் வீடுகள் உள்ளன. இதில் கிராம வாரியாக சோதனைகள் நடந்து வருகின்றன. கிட்டத்தட்ட 2.13 லட்சம் வீடுகளில் இதுவரை அறிகுறி உள்ளதா என்று சோதனை செய்து, அறிகுறி உள்ளவர்களிடம் டெஸ்ட் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சர்யமாக 300 கிராமங்களில் யாருக்கும் கொரோனா ஏற்படவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

300 கிராமங்கள்
இந்த 300 கிராமங்களில் பலருக்கு அறிகுறிகள் இருந்துள்ளன. ஆனால் சோதனையில் இவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் 429 கிராமங்களில் 129 கிராமங்களில் மட்டுமே சிலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. மற்ற கிராமங்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கின்றன.

எப்படி சாத்தியமானது
கிராமங்கள் வாரியாக மக்களை கட்டுப்படுத்துவது, விதிகளை முறையாக பின்பற்றுவது, மக்கள் ஒத்துழைப்பு என்று பல காரணங்களால் இங்கு கொரோனா பரவாமல் இருந்துள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இங்கு மக்கள் பலர் விதிகளை பின்பற்றி கொரோனா பரவல் ஏற்படாமல் தடுத்தது போல மற்ற மாவட்டங்களிலும் கிராம வாரிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பரவலை தடுக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications