பஸ்களில் என்ன பாதுகாப்பு நெறிமுறை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் கேள்வி
ஊரடங்கு முடிந்த பின் பஸ் போக்குவரத்தில் என்ன பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
சென்னை: ஊரடங்கு முடிந்த பின் பஸ் போக்குவரத்தில் என்ன பாதுகாப்பு நெறிமுறைகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது..
ஆம் ஆத்மி கட்சியின் போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்க தலைவர் ஆர்.எம். சுவாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் ஊரடங்கு முடிந்தபின்பு அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளி பின்பற்றப்படுவது தமிழக அரசு மூலம் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் இது தொடர்பான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், அனிதா சுமன்த் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் பேருந்து பயணத்தில் கூட்டத்தை தடுக்கவும்,பயணிகளிடையே சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும், பேருந்தில் ஓட்டுனர்,நடத்துனர்,பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவேண்டும் என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் தமிழக அரசு ஏற்கனவே பொதுப்போக்குவரத்து குறித்து அறிவிப்புகளை வெளியிட்டிருந்த போதிலும் ஊரடங்கிற்கு பிறகு, பஸ் பயணம் தொடர்பாக என்னென்ன பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை எடுத்துள்ளது என்பதை குறித்து போக்குவரத்து துறை செயலர் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜூன் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications