தமிழகத்தில் கொரோனா இன்று.. மேலும் 798 பேருக்கு பாதிப்பு.. 6பேர் மரணம், மொத்தமாக 8002 பேருக்கு தொற்று
சென்னை: தமிழகத்தில் மேலும் 798 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கோயம்பேடு சந்தை வாயிலாக தற்போது மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது. ஒவ்வாரு நாளும் 600க்கும் குறைவில்லாமல் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. சென்னையில் தான் உச்சகட்டமாக பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
நேற்று மாலை நிலவரப்படி தமிழகத்தில் 7204 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 798 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8002 ஆக உயர்ந்துள்ளது. மூன்றே நாளில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
கொரோனா இல்லாத மாவட்டம் ஆனது திருப்பூர்.. வைரஸ் தொற்றில் இருந்து மீண்டது எப்படி?
திருவள்ளூரில் 97 பேர்
தமிழகத்திலேயே வழக்கம் போல் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. சென்னையில் மட்டும் இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் 97 பேருக்கும், செங்கல்பட்டில் 90 பேருக்கும் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் திருவண்ணாமலையில் 10 பேருக்கும், அரியலூரில் 33 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 2051 பேர் குணம்
தமிழகத்தில் இன்று மட்டும் 92 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இதுவரை தமிழகத்தில் 2051 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தில் 5895 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் சென்னையில் தான் மிக அதிகமாக 3632 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
11,584 பேருக்கு சோதனை
இன்று மட்டும் 11862 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 254899 சாம்பிள்கள் இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தனிநபர் என்று பார்த்தால் இன்று மட்டும் 11,584 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்றுடன் சேர்த்து இதுவரை 2,43,952 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
53 பேர் இதுவரை மரணம்
தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 50வயது ஆண், 67 வயது பெண், 32 வயது பெண், கடலூரில் 32 வயது பெண், சென்னையில் தனியார் மருத்துவமனையில் 66 வயது பெண், கன்னியாகுமரியில் 65 வயது ஆண் ஆகியோர் இன்று கொரோனா தொற்று காரணமாக இறந்துள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது.
5985 பேர் சிகிச்சை
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்ட 798 பேரில் 514 பேர் ஆண்கள், 284 பேர் பெண்கள் ஆவர், ஒட்டுமொத்தமாக 5421 ஆண்களும், 2579 பெண்களும், 2 திருநங்கைகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போதைய நிலையில் 4273 பேர் கொரோனா அறிகுறிகளுடன் ஐசலேசன் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 5985 பேர் தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.