யோகி அரசுக்கே டஃப்.! விஜய் அரசு புது அதிரடி! போதை பொருள் விற்பவர்களின் சொத்துக்கள் பறிமுதல்- அரசாணை
சென்னை: போதை பொருள் விநியோகத்தை தடுக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக காவல்துறையில் புதிதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படைக்கு, போதைப்பொருட்களை விற்பவர்களின் சொத்துக்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அதிகாரம் வழங்கி புதிய அரசாணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்று இருக்கிறார். அவர் பொறுப்பேற்றதிலிருந்து, போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதிய சிறப்பு படை
இந்நிலையில் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், போதைப்பொருட்கள் தடுப்புக்கு மாவட்டம் தோறும் சிறப்பு படையை அமைக்கும் உத்தரவில் விஜய் கையெழுத்திட்டிருந்தார்.
இந்த உத்தரவை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும், மாவட்டத்திற்கு ஒரு போதைப்பொருள் தடுப்பு பிரத்யேக காவல் நிலையங்கள் என 37 காவல் நிலையங்களும், இது தவிர 9 காவல் ஆணையரகங்களில் 28 காவல் நிலையங்கள் என மொத்தம் 65 பிரத்யேக காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சிறப்பு அதிகாரம்
இந்த காவல் நிலையங்களின் பணி, முழுக்க முழுக்க போதைப்பொருட்கள் விநியோகத்தை கட்டுப்படுத்துவதுதான். முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் இந்த படை இயங்கும். அதே நேரம் இந்த படைக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டிருப்பதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதாவது இந்த படை, போதை பொருள் நடமாட்டம் குறித்த உளவு தகவல்களை சேகரிப்பது, போதைப்பொருள் விற்பனை குறித்து இணையதளம் மூலம் கண்காணிப்பது, இது தொடர்பான வழக்குகளை பதிவு செய்வது போன்ற வேலைகளை செய்யும்.
அரசாணை வெளியீடு
இது தவிர, போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர், அவர்களது உறவினர்களின் அசை மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்வது அல்லது முடக்க நடவடிக்கை எடுப்பது, நீதிமன்ற மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பது போன்ற பணிகளில் இவர்கள் ஈடுபடுவார்கள் என்று அரசாணையில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
தமிழக காவல்துறையை பொறுத்தவரையில், ஏற்கனவே மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது புதியதாக உருவாக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் தடுப்பு படை, அந்த இரு பிரிவுகளில் இருந்தும் தனித்துவமாக செயல்படும் என்றும் காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.
உத்தரப் பிரதேசத்தை மிஞ்சும் தமிழகம்
உத்தர பிரதேசத்தில் யோகி அரசு பதவிக்கு வந்த பிறகு, போதை பொருள் விற்பவர்கள் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன. போதைப்பொருள் மற்றும் மனமயக்கப் பொருட்கள் சட்டம் (NDPS Act), போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த சொத்துக்கள், வங்கி கணக்குகள் மற்றும் நிலங்களை முடக்கவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கிறது.
இதற்கு உதாரணமாக, முசாபர்நகர் காவல்துறை ஒரு முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ₹80 கோடி மதிப்பிலான சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications