சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச்சடங்குக்கு பின் தகனம் செய்யப்பட்டது கிரேஸி மோகனின் உடல்
Recommended Video
சென்னை: மறைந்த நகைச்சுவை நடிகர் மற்றும் வசனகர்த்தாவான கிரேஸி மோகனின் உடல் இன்று காலை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
நகைச்சுவை நடிகர், மேடை நாடக ஆசிரியர், வசனர்கர்த்தா என பல முகங்களை கொண்டவர் கிரேஸி மோகன். தன் டைமிங் வசனங்களால் பெரிதும் கவர்ந்தவர்.
திடீர் உடல்நலக்குறைவால் நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிரேஸி மோகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையிலேயே அவரது உயிர் பிரிந்தது.
கிரேஸி மோகன் மறைவு-இழப்பு
திரைத்துறையினருடன் நெருங்கிய நட்பு பாராட்டி வந்தவர் கிரேஸி மோகன். அவரது திடீர் மறைவு திரை நட்சத்திரங்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.கிரேஸி மோகனின் மறைவு நகைச்சுவை உலககுக்கும் மேடை நாடகத்துறைக்கும் பேரிழப்பு என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
மந்தைவெளியில் உள்ள வீட்டில்
கிரேஸி மோகனின் மறைவுக்கு திரைத்துறையினர் மட்டுமின்றி அரசியல் கட்சியின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். முன்னதாக கிரேஸி மோகனின் உடல் மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரை நட்சத்திரங்கள் அஞ்சலி
அப்போது திரைத்துறையினர் பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இசையமைப்பாளர் தேவா, நடிகர்கள் சிவகார்த்திகேயேன், சிவகுமார், பாண்டியராஜன், பிரசன்னா, சதீஷ், சிவகுமார், இயக்குனர்கள் கேஎஸ் ரவிக்குமார், வசந்த் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர்.
பெசன்ட் நகர் மின்மயானம்
இதைத்தொடர்ந்து கிரேஸி மோகனின் உடல் காலை 10.30 மணிக்கு மந்தைவெளியில் இருந்து பெசன்ட் நகருக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் பெசன்ட் நகர் மின்மயானத்தில் அவரது உடலுக்கு குடும்ப வழக்கப்படி இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் நடிகை பூஜாகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.