கூடுதல் கட்டணம் வசூலிக்கும்.. மருத்துவமனைகள் மீது குற்றவியல் நடவடிக்கை.. தலைமை செயலாளர் எச்சரிக்கை
சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் தவறு செய்தால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தலைமை செயலர் இறையன்பு எச்சரித்துள்ளார்.
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. இதனைக் கட்டுப்படுத்த வரும் 24ஆம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஷங்கரின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானர்
ஊரடங்கு உத்தரவிற்குப் பிறகு மாநிலத்தில் வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இருப்பினும், சில மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார் எழுந்துள்ளன.
தலைமை செயலர்
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் குற்றவியல் நடவடிக்கை எனத் தலைமைச் செயலர் வெ இறையன்பு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர், நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக கொரோனா பெருந்தொற்று இருந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த நம் மாநிலத்தில் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
புகார்கள்
மருத்துவ நெருக்கடி, மனநல பாதிப்பு, நிதி நெருக்கடி ஆகிய மூன்றும் நாட்டையும் நாட்டு மக்களையும் ஒன்றுசேர்ந்து தாக்குதல் நடத்தும் இந்த நேரத்தில், ஒரு சில அரசு அலுவலர்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் வணிக நிறுவனங்களைச் சார்ந்த சிலர் மேற்கொள்ளும் சட்டத்திற்குப் புறம்பான மனிதாபிமானமற்ற செயல்கள் முதல்வரின் கவனத்திற்கு வரப்பெற்றுள்ளது. அது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
குற்றவியல் நடவடிக்கை
இதனடிப்படையில், மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளைக் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது, அரசின் இலவச சேவைகளுக்கும் பாதிக்கப்பட்டவர்களிடம் கையூட்டு பெறுவது போன்ற மனிதநேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது. தவறு செய்யும் அலுவலர்கள் மீது பணிநீக்கம் உட்பட துறைரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
மேற்படி செயல்கள் குறித்து, உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அரசுத் துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் காவல்துறையின் லஞ்ச ஒழிப்புப் பிரிவு ஆகியோர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. எந்த நிலையில் உள்ள அலுவலராயிருப்பினும் அல்லது எந்த நிறுவனமாக இருந்தாலும், புகார்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு, தவறு நடக்கக்கூடிய இடங்களில் கண்காணிப்புப் பணியினையும் தீவிரப்படுத்த அறிவுரை வழங்கப்படுகிறது.
கவனமாகவும் கண்ணியமாகவும் செயல்பட வேண்டும்
மக்களின் உயிர் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயர் ஏற்படாமல் கவனமாகவும், கண்ணியமாகவும் செயல்பட வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.