பூந்தமல்லியில் மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டன்ட் தற்கொலை.. கடைசி ஆசையை விவரித்து கடிதம்!
சென்னை: பூந்தமல்லியில் மத்திய ரிசர்வ் படை துணை கமாண்டண்ட் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது சாவிற்கு யாரும் காரணம் அல்ல என கடிதமும் எழுதி வைத்துள்ளார்.
பூந்தமல்லியை அடுத்த கரையான்சாவடியில் மத்திய ரிசர்வ் படை 77-வது பட்டாலியன் அமைந்துள்ளது. இங்கு துணை கமாண்டன்ட்டாக பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீஜன் (50). இவர் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த ஸ்ரீஜன் தனது அறைக்குச் சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்தில் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டதையடுத்து அங்கு பணியில் இருந்த போலீசார் உள்ளே சென்று பார்த்தனர்.

பரிசோதனை
அப்போது ஸ்ரீஜன் தனது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்தார். அவரை மீட்டு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

தற்கொலை
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அவரது அலுவலக அறையில் இருந்து ஒரு கடிதம் கண்டெடுக்கப்பட்டுள்ளது அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை. தனது சொந்த பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை
அந்த கடிதத்தில் ஸ்ரீஜன் கூறுகையில் மரியாதைக்குரிய ஆன்டனி ஜென்சன் சார், நான் இந்த வாழ்க்கையை வாழ விரும்பவில்லை. பிரச்சினைகள் இல்லாத உலகிற்கு செல்கிறேன். நீங்களும் இந்த பட்டாலியன் பிரிவில் இருந்த சக ஊழியர்களும் எனது நலனில் அக்கறை கொண்டிருந்தீர்கள். அதற்கு உங்களுக்கு நன்றிகள்.

மறைமுகமாக
எனது இறப்புக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ யாரும் காரணமல்ல. இது முற்றிலும் என் தனிப்பட்ட விவகாரம். எனக்கு ஒரு கடைசி ஆசை உள்ளது. எனது உடலை சென்னையில்தான் அடக்கம் செய்ய வேண்டும். என் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல வேண்டாம்.

மன்னிப்பு
என்னை உங்கள் தம்பி போல் நினைத்தீர்கள், நான் இவ்வாறு செய்ததற்கு என்னை மன்னித்துவிடுங்கள் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். துணை கமாண்டன்ட் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications