சென்னை விமான நிலைய தங்க கடத்தலுக்கும், அதிகாரிகள் மாற்றத்திற்கும் தொடர்பு கிடையாது: சுங்கத் துறை
சென்னை: சென்னை விமான நிலையத்தில் நடந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கக் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபடுத்தி சுங்க அதிகாரிகள் மாற்றப்பட்டதாக "ஒன்இந்தியாதமிழ்" செய்தி வெளியிட்டிருந்தது. இதற்கு மத்திய சுங்கத்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 13 பயணிகளிடம் சுமார் ரூ.1.50 கோடி மதிப்புடைய 2 கிலோவுக்கும் மேற்பட்ட தங்க பசைகள் மற்றும் ஐபோன்கள் இருந்ததை கண்டுபிடித்து அவற்றை பறிமுதல் செய்ததாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தியபோது, சுங்க இலாகா அதிகாரிகள் சிலரின் உதவியுடன் சுங்கச் சோதனை இல்லாமல் பயணிகள் சிலர் கடத்தல் பொருட்களை வெளியில் எடுத்து வந்ததாகவும், எனவே அவர்கள் மீது துறைரீதி நடவடிக்கையாக, பணியிடமாற்றம் செய்யப்பட்டதாகவும், "ஒன்இந்தியாதமிழ்", ஜனவரி 20ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.

சுங்கத்துறை மறுப்பு: இந்த நிலையில்தான், மத்திய சுங்கத்துறை இதற்கு மறுப்பு தெரிவித்து, அதிகாரிகள் மாற்றம் என்பது வழக்கமான நடைமுறை என்றும், கடத்தல் சம்பவத்துடன் இதற்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. சுங்கத்துறை அதிகாரிகளின் இடமாற்றம், துறையின் வழக்கமான செயல்பாட்டின் ஒரு பகுதி என மத்திய சுங்கத்துறை தெளிவுபடுத்தியுள்ளது. தங்கக் கடத்தல் சம்பவத்துடன் அதிகாரிகள் பெயரை இணைத்து வெளியான செய்தி, அதிகாரிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும், துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய வட்டாரத்தில் பரவிய தகவலின் அடிப்படையில் அந்த செய்தி வெளியிட்டோம். ஆனால், சுங்கத்துறை அதிகாரிகளிடம் உண்மை தகவலை சரிபார்க்காமல் செய்தி வெளியிட்டிருக்க கூடாதுதான். இதுபோன்ற சூழ்நிலையில், சுங்கத்துறையின் கருத்தை கேட்டறிந்த பின்னரே செய்தி வெளியிட்டிருக்க வேண்டும். அதேநேரம் சுங்கத்துறைக்கு எதிராகவோ அல்லது குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராகவோ செய்தி வெளியிட ஒன்இந்தியாதமிழுக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம். அந்த செய்தி வருத்தத்திற்கு உரியது.












Click it and Unblock the Notifications