விஜய் வைத்த கட்அவுட்? திமுகவை சீண்டும் விசிக..! திராவிட இயக்கம் அம்பேத்கரைப் புறக்கணித்ததா?
சென்னை: தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் கட் அவுட் மூலம் விஜய் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்துவிட்டதாகத் தலித் அரசியல் பேசுபவர்கள் மறைமுகமாக திமுகவை விமர்சித்து வருகின்றனர். உண்மையில் திராவிட இயக்கம் அம்பேத்கரை கண்டுகொள்ளவில்லையா?
விஜய் செய்வதால் அது சர்ச்சையாகிறதா? இல்லை சர்ச்சையான விசயங்களை விஜய் செய்கிறாரா? என்பதே புரியவில்லை. விக்கிரவாண்டி வி.சாலையில் நடக்க இருக்கும் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் மூன்று தலைவர்கள் மத்தியில் விஜய்யின் கட் அவுட் இடம்பெற்றுள்ளது. அதாவது காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகிய மூன்று தலைவர்கள் இடையில் விஜய் நிற்கிறார்.

அதன் அருகிலேயே இன்னும் இடம் காலியாக இருப்பதால், அதில் எந்தத் தலைவரை விஜய் வைக்க இருக்கிறார் என்று ஒரு சுவாரஸ்யமான போட்டி நிலவி வருகிறது. ஆனால், அதை எல்லாம் தாண்டி அம்பேத்கர் கட் அவுட் தான் இப்போது விசிக உள்ளிட்ட தலித் அமைப்புகளை உருமி மேளம் வாசிக்க வைத்திருக்கிறது. அதாவது தலித் தலைவராக மட்டுமே சுருக்கிப் பார்க்கப்பட்ட அம்பேத்கரைப் பொதுவெளியில் விஜய் தலைவராக முன்வைத்து பெரிய சாதனை என்ற கருத்தை விசிக சங்கத் தமிழன் முன் வைத்திருக்கிறார்.
மற்றொரு பக்கம் காமராஜர், பெரியாரை மட்டும் பக்கம் பக்கமாக நிறுத்திவிட்டு அம்பேத்கரை ஏன் ஓரங்கட்டினர் என்று ஒரு அபூர்வமாக விமர்சனத்தை முன்வைத்துள்ளனர் சிலர். அதாவது பட்டியலின தலைவர் என்பதால் இந்தப் பாகுபாடு என அவர்கள் வாதிடுகின்றனர். இதற்கு எவிடன்ஸ் கதிர் ஒரு பதிலை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அளித்துள்ளார். அதாவது பெரியார் மற்றும் அம்பேத்கர் நடுவில் விஜய் இருக்கிறார் என்று இதை எடுத்துக் கொள்ளலாம் என்று அவர் எழுதி இருக்கிறார்.
மற்றொரு பகுதியினர், கட்சியின் கொள்கை விளக்கப் பாடலில் எம்.ஜிஆர்., அண்ணா மூன்று எழுத்து. அதற்கு அடுத்து விஜய் மூன்று எழுத்து எனப் பாடிவிட்டு, இப்போது அண்ணாதுரையும் இல்லை. எம்.ஜி.ஆரும் மாநாட்டு கட் அவுட்டில் இல்லை ஏன் என்று கேட்டுள்ளனர். இது விவாதிக்க வேண்டிய கேள்விதான் என்று பலரும் சொல்கின்றனர்.
தமிழ்நாட்டில் தலித் அரசியல் எழுச்சி என்பது அம்பேத்கர் நூற்றாண்டு வேளையில்தான் உருவானது. அதாவது 1990கள் பின்புதான் தலித் மக்கள் கட்சி ரீதியாக ஒரு அமைப்பாக தமிழ்நாட்டில் மட்டும் அல்ல, இந்தியா முழுக்கவே வேகம் எடுத்தனர். ஆனால், அதற்கு முன்பாகவே பெரியார் தன் வாழ்ந்த காலத்திலேயே அம்பேத்கரைத் தனது தொண்டர்களுக்கு தன் எழுத்தின் வழியே கொண்டு சேர்த்தார்.
பர்மாவில் நடைபெற்ற புத்தர் மாநாட்டில் அம்பேத்கரும் பெரியாரும் ஒன்றாகக் கலந்து கொண்டனர். இந்தச் சந்திப்பு நடப்பதற்கு முன்பே இருவருக்கும் கொள்கை ரீதியாக ஒரு தொடர்பும் இணக்கமும் இருந்தது. குடி அரசு இதழில் பம்பாயில் சுயமரியாதை முழக்கம் என்று தலைப்பிட்டு அம்பேத்கரின் உரையைப் பெரியார் மொழிபெயர்த்து தமிழில் 16.6.1929 இல் வெளியிட்டுள்ளார். 1927 இல் மகத் சத்தியாகிரகம் என்ற தலித் மக்கள் பொது குளத்தில் நீர் எடுக்கும் போராட்டத்தை அம்பேத்கர் நடத்தினார். அப்போது நீரை நெருப்பு பிடித்தது என்று எழுதினார். அதேபோல் அம்பேத்கர் புகைப்படத்தை அவர் மறைவதற்கு 2 மாதங்கள் முன்னதாக வேலூர் நகராட்சியில் பெரியார் திறந்துவைத்தார். அதாவது அக்டோபரில் படம் திறக்கப்பட்டது. டிசம்பர் மாதம் அம்பேத்கர் மறைந்தார்.
இதை அனைத்தையும் கடந்து அம்பேத்கர் நடத்திய தாழ்த்தப்பட்டோர் முதல் மாநாட்டுக்குப் பெரியார் வாழ்த்துச் செய்தியை அனுப்பினார். ஈ.வெ.ராமசாமி அனுப்பிய வாழ்த்துத் தந்தியும் கடிதமும் அங்குப் படிக்கப்பட்டன" என்ற செய்திக் குறிப்பு ஆங்கில ஏடான ரிவோல்ட், 29.9.1929 இதழில் வெளியாகி இருக்கிறது. 1936-37இல் உத்தரப்பிரதேசம் மாநிலம் லாகூரில் 'ஜாத்பட் தோடக் மண்டல்' நடத்திய ஜாதி எதிர்ப்பு மாநாட்டில் தலைமையுரை நிகழ்த்த அம்பேத்கர் அழைக்கப்பட்டார். அதில் அம்பேத்கர் உரையிலுள்ள சில பகுதிகளை நீக்க வேண்டும் மாநாட்டுக் குழு நிபந்தனை விதித்தது. ஆனால், அந்த உரையப் பெரியாரின் 'குடிஅரசு' தமிழில் மொழி பெயர்த்து ஒரு வருடம் தொடராக வெளியிட்டார்.
ஆக, திராவிட இயக்கம் அம்பேத்கரை தொடர்ந்து கொண்டாடியும் ஆதரித்து வந்ததற்காகச் சான்றுகள் இவை. இந்தச் செயல்பாடுகள் அனைத்து 1940களுக்கு முன்பாக நடந்தவை. அண்ணாதுரை கூட அம்பேத்கர் பற்றி எழுதி இருக்கிறார். திமுகவோ அல்லது திராவிட இயக்கமோ அம்பேத்கரைப் புறக்கணித்தது இல்லை. சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் முழு உருவச் சிலையைக் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அம்பேத்கர் பெயரை அவர் பிறந்த மாநிலத்திலேயே சூட்டுவதற்கு மிகப்பெரிய எதிர்ப்புகள் நடந்தன. ஆனால், சத்தமே இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள சட்டக்கல்லூரிக்கு அம்பேத்கர் பெயரை மு.கருணாநிதி வைத்தார்.அம்பேத்கர் நூல்களை மொத்தமாக திமுக அரசு மலிவு பதிப்பாக 100 ரூபாய் விலையில் வெளியிடத் திட்டமிட்டு வருகிறது.
இதை எல்லாம் எதையும் கணக்கில் கொள்ளாமல் ஏதோ விஜய் கட் அவுட் வைத்த பிறகுதான் தலித் மக்களுக்கு அங்கீகாரமே விஜய் மூலம் கிடைத்துள்ளது என்பது போல் ஒரு தோற்றத்தை சிலர் கட்டமைக்கிறார்கள். அந்தச் சர்ச்சையில் விசிகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களும் பங்கேற்று விவாதிப்பது துரதிருஷ்டமானது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.












Click it and Unblock the Notifications