சரியும் எடப்பாடி கோட்டை.. மொத்தமாய் சோலியை முடித்த சிவி சண்முகம்! முதல்வர் விஜய்க்கு அடிக்குது யோகம்
சென்னை:தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கட்சிக்குள் அதிருப்தி உச்சத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் ஒரு பெரிய குழு தனியாக செயல்படத் தொடங்கியிருப்பதோடு, எஸ்பி வேலுமணியை சட்டசபை குழு தலைவராக்கவும், விஜய்க்கு ஆதரவளிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் சொல்கின்றன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக வெறும் 47 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்த கட்சி, பல தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. சில முக்கிய தலைவர்களே டெபாசிட் இழந்தது கட்சிக்குள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த தோல்விக்குப் பொறுப்பேற்று எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற கோரிக்கை இப்போது அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்எல்ஏக்கள் மத்தியில் வலுத்து வருகிறது. இதனால் எடப்பாடிக்கு நெருக்கடி அதிகரித்தது.
அதிமுக உட்கட்சி மோதல்
இந்த சூழலில், முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் கடந்த மூன்று நாட்களாக சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள அவரது இல்லத்தில் ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. அந்த ஆலோசனைகளில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றதாக கூறப்படுகிறது. அங்கு நடைபெற்ற ஆலோசனையில், அதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய்க்கு ஆதரவு
அதில் மிகப்பெரிய திருப்பமாக, அதிமுகவைச் சேர்ந்த 34 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஆதரவுக் கடிதங்களும் தயாராகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சித்தாவல் தடை சட்டம் பொருந்தாத வகையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அளித்தால் சட்ட ரீதியான சிக்கல் ஏற்படாது என்ற ஆலோசனையும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சி வி சண்முகம்
இதனையடுத்து, அந்த 34 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களுடன் முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்திக்க சி.வி.சண்முகம் முயற்சி மேற்கொண்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த சந்திப்பு நடந்தால், தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்திற்கு அது வழிவகுக்கும் என கூறப்படுகிறது. மறுபுறம், இந்த நகர்வுகளை கட்டுப்படுத்த எடப்பாடி பழனிசாமி தரப்பும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளது.
சமாதான பேச்சு
சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் மாவட்டச் செயலாளர்களுடன் அவர் அவசர ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது, சி.வி.சண்முகத்துடன் சமாதான பேச்சு நடத்த வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் சி.வி.சண்முகம் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எடப்பாடி பழனிசாமி
"தேர்தலில் சரியான கூட்டணி அமைக்கப்படவில்லை. வேட்பாளர்களுக்கு போதிய நிதி வழங்கப்படவில்லை. கட்சியின் தோல்விக்கு முழு பொறுப்பும் எடப்பாடி பழனிசாமிக்கே" என அவர் நேரடியாக கூறியதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தவெகவுக்கு ஆதரவு அளிக்கும் முடிவில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எஸ்.பி.வேலுமணி
இதற்கிடையே, அதிமுக சட்டப்பேரவைக் குழுத் தலைவரை மாற்றும் முயற்சியும் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய சூழலில் எஸ்.பி.வேலுமணியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்யும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் அதிகாரப் போட்டி வெளிப்படையாக வெடித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க மறுக்கும் ஒரு பெரிய அணியே உருவாகிவிட்டதாக சொல்கின்றனர் அதிமுகவினர்.












Click it and Unblock the Notifications