அவைத்தலைவர் தேர்வு செல்லும்.. வைத்திலிங்கம் சொல்றது தப்பு.. அடித்துச் சொன்ன சி.வி.சண்முகம்!
சென்னை : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அதிமுகவில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று கூறியதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செல்லாது என்ற வைத்திலிங்கம் கருத்துக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். வைத்திலிங்கம் எழுப்பியுள்ள 5 கேள்விகளுக்கு பதில் அளிக்கிறோம் எனத் தெரிவித்துப் பேசினார்.

மேலும் பேசிய அவர், "அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்ந்தெடுக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை. அவைத்தலைவரை தேர்ந்தெடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் அவசியம் இல்லை. அவைத்தலைவரை பொதுக்குழு உறுப்பினர்களே தேர்ந்தெடுக்க வேண்டும், அதுதான் அதிமுகவின் சட்ட விதி. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு பஞ்சாயத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை; தேர்தல் ஆணையத்திற்குத்தான் உண்டு.
அவைத்தலைவரை தேர்வு செய்தது தீர்மானம் அல்ல, தேர்தல். அவைத்தலைவரை பொதுக்குழுவில் நேற்று அறிவித்தது தீர்மானம் கிடையாது. அவைத்தலைவர் தேர்வு என்பது பொதுக்குழு தீர்மான வரம்பிற்குள் வராது. தற்போது கட்சியின் உச்சபட்ச அதிகாரம் படைத்தவர் அவைத்தலைவர் மட்டுமே. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வந்தால் சந்திப்போம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications