வெலவெலக்கும் விழுப்புரம்! சவுண்ட் விட்ட சண்முகம்.. சைலண்டாய் ஆஃப் செய்த எடப்பாடி! அதகளமான அதிமுக!
சென்னை: அதிமுகவில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் நியமனம் கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட பிளவை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பல்வேறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் மற்றும் மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி.சண்முகத்தின் பெயர் பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது. இதனால், அதிமுகவில் அவர் ஓரங்கட்டப்படுகிறாரா என்ற கேள்வியும் அதிமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் உள்கட்சி மோதல் தீவிரமடைந்தது. எடப்பாடி பழனிசாமியின் தலைமையை எதிர்த்து, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் போர்க் கொடி தூக்கினர்.
சட்டப்பேரவையிலும் அவர்கள் தனி அணியாக செயல்பட்டதோடு, நம்பிக்கை வாக்கெடுப்பில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததும் கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சி பல முன்னாள் அமைச்சர்களின் முக்கிய பொறுப்புகள் பறிக்கப்பட்டன.

மேலும், அவர்களது ஆதரவாளர்களும் பல்வேறு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்த மூத்த நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருந்தனர். இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழக அமைச்சரவை விரிவாக்கத்தில் அதிமுக அதிருப்தி அணியைச் சேர்ந்த எவருக்கும் வாய்ப்பு கிடைக்காததால், மீண்டும் பழனிசாமியுடன் சமரசம் செய்யும் முயற்சிகள் தொடங்கின.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, காமராஜ் உள்ளிட்டோர் பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது வருத்தத்தை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, சமீபத்தில் வெளியிடப்பட்ட நிர்வாகிகள் நியமனப் பட்டியலில், எஸ்.பி.வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதேபோல், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், காமராஜ், கே.சி.வீரமணி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. ஆனால், இந்தப் பட்டியலில் சி.வி.சண்முகத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதுவே தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதிமுகவில் சி.வி.சண்முகம் ஒரு முக்கிய தலைவராக நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறார். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்ததுடன், விழுப்புரம் மாவட்டத்தில் கட்சியின் முக்கிய முகமாகவும் இருந்துள்ளார்.
2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு பாமக மற்றும் ராமதாஸ் கடுமையாக அதிமுகவை விமர்சித்தபோது, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த தலைவராக சி.வி.சண்முகத்திற்கு ஜெயலலிதா கூடுதல் முக்கியத்துவம் அளித்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் மாவட்டச் செயலாளர் பதவியிலும் நீண்ட காலம் இருந்தார். 2016-ஆம் ஆண்டு மீண்டும் சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும் கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவராகவே இருந்து வந்தார்.
ஆனால், கட்சி முடிவுகள், கூட்டணி விவகாரங்கள் உள்ளிட்ட பல விஷயங்களில் பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தேர்தலுக்குப் பிறகு பழனிசாமிக்கு எதிராக எம்எல்ஏக்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் சி.வி.சண்முகம் ஈடுபட்டதாகவும், அதனால் இருவருக்கும் இடையேயான உறவு மேலும் பாதிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
சமீபத்திய சமரச முயற்சிகளிலும், தன்னிடம் இருந்து பறிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பதவியையும், அமைப்புச் செயலாளர் பொறுப்பையும் மீண்டும் வழங்க வேண்டும் என்று சி.வி.சண்முகம் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், முதலில் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும், பதவிகள் குறித்து பின்னர் முடிவு செய்யலாம் என்ற நிலைப்பாட்டிலேயே பழனிசாமி இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் வெளிப்பாடாகவே, புதிய நிர்வாகிகள் பட்டியலில் சி.வி.சண்முகத்தின் பெயர் இடம்பெறவில்லை என்று கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதனால் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவர் கட்சியில் உண்மையாகவே ஓரங்கட்டப்படுகிறாரா அல்லது எதிர்காலத்தில் மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.














Click it and Unblock the Notifications