“SAC-க்கு புள்ளைய ஒழுங்கா வளர்க்க துப்பில்ல”.. கடுமையாக பதில் கொடுத்த சி.வி.சண்முகம்
சென்னை: தவெக தலைவர் விஜய் பற்றி மிகவும் காட்டமாக விமர்சித்துள்ளார் முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை எம்.பியுமான சி.வி.சண்முகம். எஸ்.ஏ.சந்திரசேகரின் பேட்டி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த சி.வி.சண்முகம், "பிள்ளையை வளர்ப்பதற்குக் கூட துப்பில்லை" எனக் கடுமையாக விமர்சித்தார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வெயிலையும் பொருட்படுத்தாமல் வரிசையில் நின்று வாக்களித்தனர். தேர்தல் ஆணையம் தகவல்களின்படி, 6 மணி வரை தமிழ்நாட்டில் 84.45% வாக்குகள் பதிவாகியுள்ளன.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், தனது சொந்த ஊரான மயிலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அவ்வையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி எண். 208-ல், மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.
வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசுகையில், "வாக்குப்பதிவு நாளான இன்று வாக்காளர்கள் மத்தியில் மிகப்பெரிய மௌனப் புரட்சி ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் எழுச்சியோடு இந்த ஆட்சி அகற்றப்பட வேண்டும், மாற்றம் வேண்டும் என்பது மக்கள் முகத்தில் தெரிகிறது.

கடந்த 5 ஆண்டுகால திராவிட மக்கள் விரோத அரசு, மன்னர் ஆட்சி, குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். மக்களாட்சி மலர வேண்டும். ஏழைகளின் பிரச்சனைகளைத் தீர்க்கக் கூடிய, மக்கள் மீது கவனம் செலுத்தக் கூடிய ஜெயலலிதா ஆட்சியை, எம்.ஜி.ஆர். பாணியில் தரக்கூடிய ஒரே தலைவர் எடப்பாடியார் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் எழுச்சியாக எழுந்துள்ளது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைய உள்ளது. இரட்டை இலை சின்னம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும்" எனத் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விஜய்யின் தந்தை சந்திரசேகர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "எனது மகனை தமிழ்நாட்டுக்குத் தத்துக் கொடுத்துவிட்டேன்" என்று கூறியது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதில் அளித்த சி.வி.சண்முகம், "பிள்ளையை வளர்ப்பதற்குக் கூட துப்பில்லை" எனக் கடுமையாக விமர்சித்தார்.













Click it and Unblock the Notifications