MLAக்களை புதுச்சேரியில் விட்டுவிட்டு டெல்லி கிளம்பிய சி.வி.சண்முகம்.. துணை ஜனாதிபதியை சந்திக்கிறார்
சென்னை: டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து எம்.பி பதவியை ராஜினாமா செய்கிறார். இன்று இரவு 8 மணிக்கு மாநிலங்களவை தலைவர் சி.பி ராதாகிருஷ்ணனை சந்தித்து கடிதத்தை வழங்குகிறார்.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், தவெக 108 இடங்களில் வென்று தனிப் பெரும் கட்சியாக உள்ளது. மேலும், காங்கிரஸுடனான கூட்டணி ஆதரவைப் பெற்ற தவெக 112 எனும் எண்ணிக்கையுடன் தற்போது இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து நேற்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்த தவெக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால், பெரும்பான்மை பெற்ற பின்பே ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியும் என ஆளுநர் தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து இன்று மீண்டும் தவெக தலைவர் விஜய், ஆளுநரைச் சந்தித்துப் பேசினார். சுமார் 40 நிமிடங்களுக்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு, ஆளுநர் மாளிகையில் இருந்து விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது. அதில், "தவெக தலைவர் விஜய், இன்று காலை தமிழ்நாடு ஆளுநரைச் சந்தித்தார். இந்தச் சந்திப்பில், தவெக ஆட்சி அமைக்க போதிய எம்.எல்.ஏ.க்கள் இல்லை என விளக்கினார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரி அருகே நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சிவி சண்முகம் ஏற்பாட்டில் 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் புதுச்சேரி ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பது பெரும் கவனம் பெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை கிடைக்காததால், ஒருவேளை குதிரை பேரம் நடைபெறுமோ என்ற அச்சத்திலேயே, அதை தவிர்ப்பதற்கான ஒரு நடவடிக்கையாக, எம்எல்ஏ-க்களை புதுச்சேரியில் தங்க வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆளுநரை சந்திக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் புதுச்சேரி சென்றுள்ளார்.
இந்தச் பரபரப்பான சூழலில், அதிமுக சார்பில் மயிலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அக்கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம், தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய இன்று டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இதன் காரணமாக தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் வெங்கடேசன், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் நிரஞ்சன், நாம் தமிழர் கட்சி சார்பில் விஜய் விக்ரம் உள்பட 21 பேர் போட்டியிட்டனர். அங்கு மொத்தம் 89.64 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.
கடந்த மே 4 ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகம் 82 ஆயிரத்து 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக வேட்பாளர் நிரஞ்சன் 52 ஆயிரத்து 312 வாக்குகள் பெற்று 2-வது இடமும், தேமுதிக வெங்கடேசன் 46 ஆயிரத்து 267, நாதக விஜய் விக்ரம் 4,386 வாக்குகளும் பெற்றனர்.
இந்த நிலையில், மயிலம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து சி.வி.சண்முகம் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்றிருந்தார் சிவி சண்முகம்.












Click it and Unblock the Notifications