உருவாகும் கதி புயல்.. தமிழகம் உட்பட தென் இந்தியாவுக்கு செம மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: வங்க கடலில் உருவாகும் கதி புயல் காரணமாக தெற்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் அடுத்த வாரம் நல்ல மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு அமைப்பு (IMD) அறிவித்துள்ளது.
Recommended Video
வங்கக்கடலில் உருவாக்கிய அம்பன் புயல், மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு வாரங்கள் முன்பு கரையை கடந்தது. இதன்பிறகு அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் மகாராஷ்டிரா மாநிலத்தில் சில தினங்களுக்கு முன்பு கரையை கடந்தது.
இந்த நிலையில் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கதி புயல்
இது வலுப்பெற்று புயலாக உருமாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயலுக்கு கதி (cyclone gati) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் மிருதஞ்சயா மகாபத்ரா, கூறுகையில், கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளது. இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தால், இந்தியாவில் மேலும் பல மாநிலங்களிலும் முன்கூட்டியே பருவமழை கால்பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மழை
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா மற்றும் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பருவமழை முன்கூட்டியே துவங்கும் வாய்ப்பு உள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் இது வரையிலான காலகட்டத்தில் வழக்கத்தை விட 9 சதவீதம் அதிகமாக நாடு முழுக்க மழை பதிவாகி உள்ளது. புயல் சின்னம் மட்டுமல்லாது வெப்பச்சலனம் இதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

மும்பையில் தென்மேற்கு பருவமழை
கதி புயல் காரணமாக, தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் மட்டுமல்லாது உத்தரபிரதேசம் கிழக்கு ராஜஸ்தான் வரையில் நல்ல மழை பொழிவு வாய்ப்பு இருக்கிறது. மும்பை மாநகரில் ஜூன் 11 ஆம் தேதி தென்மேற்கு பருவமழை காலடி எடுத்து வைக்கும். கடந்த ஆண்டு மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் எவ்வாறு பருவமழை பெய்தது என்பது பற்றி ஆய்வுகளை அடிப்படையில் பார்த்தால், வங்கக் கடலில் உருவாக உள்ள புயல் சின்னம் காரணமாக ஜூன் 11ம் தேதி மும்பையில் தென்மேற்கு பருவமழை ஆரம்பித்து விடும் என்பது எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒடிசாவில் கதி புயல் கரையை கடக்கும்
கதிப் புயல் தமிழகத்தில் கரையை கடக்காது. அது அனேகமாக ஒடிசா மாநிலத்தில் அடுத்த வாரம் கரையை கடக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கனவே அம்பன் புயலால், ஒடிசா கடும் பாதிப்பை சந்தித்தது. இப்போது மறுபடி ஒரு புயலால், அந்த மாநிலம் இப்போதே முன்னெச்சரிக்கைகள் குறித்து ஆலோசிக்க ஆரம்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications