வங்கக்கடலில் உருவாகும் யாஸ் புயல் - 22 சிறப்பு ரயில்களை ரத்து செய்த தெற்கு ரயில்வே
வங்கக் கடலில் உருவாகும் யாஸ் புயல் ஒடிசா மேற்கு வங்கம் இடையே 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளதால் பல ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
சென்னை: யாஸ் புயல் சின்னம் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மே 23 முதல் மே 29ஆம் தேதி வரை 22 சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது. வங்கக் கடலில் உருவாகும் யாஸ் புயல் ஒடிசா மேற்கு வங்கம் இடையே 26ஆம் தேதி கரையைக் கடக்கும் என்று கூறியுள்ளதால் 22 சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொது போக்குவரத்து தடைபட்டுள்ளது. குறிப்பிட்ட தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருவதால் அவசர தேவைக்கு மக்கள் பயணம் மேற்கொள்ள முடிகிறது.

கொரோனா பாதிப்பு, ஊரடங்கு அகியவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் அரபிக் கடலில் உருவான தீவிர புயல் டவ் தே குஜராத், மகாராஷ்டிரா மாநிலத்தில் சேதத்தை ஏற்படுத்தின. அந்த புயல் தாக்கி ஒரு வார காலத்திற்குள் வங்கக் கடலில் யாஸ் என்ற புதிய புயல் உருவாக உள்ளது.
வடக்கு அந்தமான் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி இருப்பதாகவும் அது புயலாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வரும் 24ஆம் தேதி புயலாக தீவிரமடைந்து 26ஆம் தேதி ஒடிசா மேற்கு வங்க கடற்கரையை ஒட்டி கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் ஒடிசா, மேற்கு வங்கம் மட்டுமின்றி கிழக்கு கடற்கரை பகுதிகளில் இருக்கும் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் அந்தமான் தீவுகளில் அவசர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமாறும் அத்தியாவசிய மருந்துகள் வசதிகளை போதிய அளவில் வைத்திருப்பதை உறுதி செய்யுமாறும் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மே 23 முதல் மே 29ஆம் தேதி வரை 22 சிறப்பு ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது.
நாகர்கோயில் - ஹவுரா, திருச்சி - ஹவுரா, சென்ட்ரல் - புவனேஸ்வர் உட்பட 22 சிறப்பு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. யாஸ் புயல் ஓடிசா, மேற்கு வங்கம் அருகே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications