நேர்மையே இல்லை.. வாக்குச் சாவடி மையங்களில் வெப் கேமரா வைக்க என்ன பிரச்சினை.. டி ஜெயக்குமார் நறுக்
சென்னை: வாக்குச் சாவடி மையங்களில் வெப் கேமரா பொருத்த என்ன பிரச்சினை? என முன்னாள் அதிமுக அமைச்சர் டி ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஊரக உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை தற்போது முதல் கட்ட தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை பொருத்தமட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகளை நிரப்புவதற்காக 9 மாவட்டங்களில் நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் ஜனநாயக விரோத செயலை திமுக செய்து வருகிறது. பொதுவாக தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பூத் சிலிப்பை அதிகாரிகள்தான் வீடு வீடாக கொண்டு போய் கொடுப்பார்கள்.

வாக்குப் பதிவு
பல இடங்களில் வாக்கு சாவடி எங்கு உள்ளது, வாக்கு சாவடி எண் என்ன என்பது போன்ற தகவல்கள் கொடுக்கப்படவில்லை. தேர்தலை ஜனநாயகப்படி நேர்மையாக நடத்த வேண்டும் என்றுதான் அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் வலியுறுத்தியுள்ளோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வாக்குப் பதிவை கூடுமான அளவுக்கு அந்த கேமராவில் பதிவு செய்திருக்க வேண்டும்.

பூத் சிலிப்
அது மட்டுமல்லாமல் 3 அடுக்கு பாதுகாப்பு முறை, பூத் சிலிப் வழங்குவது உள்ளிட்டவற்றை மேற்கொண்டால் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்த வாய்ப்பு இருக்கும் என்பதால் உயர்நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்றோம். தேர்தல் நியாயமாக நடத்துவோம் என தமிழக மாநில தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் உறுதி கொடுத்தது. ஆனால் அந்த உறுதி காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது.

வெப் கேமரா
வாக்குச் சாவடிகள் குறைவாக உள்ள நிலையில் பல இடங்களில் வெப் கேமரா வைக்கப்படவில்லை. சில இடங்களில் கேமராமேனை கொண்டு பதிவு செய்கிறார்கள். வெப் கேமரா வைக்க என்ன பிரச்சினை இவர்களுக்கு? திருநெல்வேலி, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஏஜென்ட்டுகள் உட்கார கூட நாற்காலி போடப்படவில்லை.

நேர்மை இல்லை
எந்த கட்சியினரும் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடக் கூடாது என்ற நிலையில் கோவிலம்பாக்கம் பகுதியில் திமுக நிர்வாகி ஒருவர் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். சட்டசபை தேர்தலில் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை கொடுத்து திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. நீட் தேர்வால் மாணவர்கள் உயிரிழக்கிறார்கள். தேர்தல் நேர்மையாக நடந்தால் மட்டுமே அதிமுக வெற்றி பெறும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications