முறையாக பதிவு செய்ய மருத்துவமனைகளுக்கு கெடு.. அதிரடிக்கு தயாராகும் சுகாதாரத்துறை அதிகாரிகள்
சென்னை: தமிழகத்தில் முறையாக பதிவு செய்யப்படாத மருத்துவமனைகள், கிளினிக்குகள் உள்ளிட்டவற்றை மூடும் முயற்சியில் சுகாதார துறை இறங்கியுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவம் சார்ந்த நிறுவனங்களும், 2018 தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

மேற்கண்ட சட்டத்தின் கீழ் பதிவு செய்தால் மட்டுமே, கிளினிக்குகள், மருத்துவ ஆய்வகங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள் ஆகியவை தொடர்ந்து இயங்க அரசு அனுமதிக்கும்.
இதற்காக மார்ச் 31 வரை முன்பு கெடு விதிக்கப்பட்டிருந்தது. பல மருத்துவ நிறுவனங்களின் கோரிக்கையை ஏற்று, இந்த கெடு தற்போது மே 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்ய மருத்துவ நிறுவனங்களுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், புதிய சட்டத்தின் கீழ் மருத்துவ நிறுவனங்கள் தங்களை பதிவு செய்து கொள்வதற்கு கீழ்கண்ட அம்சங்கள் அவசியம். போதிய இட வசதி, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிப்பிடம், ஒவ்வொரு பிரிவுக்கும் தேவையான ஊழியர்கள் இருத்தல் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
மேலும் கிராமங்களில் இருக்கும் லேப்கள் குறைந்தபட்சம் 500 சதுர அடி பரப்பிலும், நகரங்களில் இருக்கும் லேப்கள் குறைந்தபட்சம் 700 1,500 சதுர அடி பரப்பிலும் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில், மருத்துவ சேவைகள் இயக்குனரகத்தின் 3 குழுக்கள் இதுதொடர்பான சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுகாதாரத்துறையில் முறையாகப் பதிவு செய்யாத மருத்துவமனைகள், கிளினிக்குகளை கண்டறிந்து அவற்றை இழுத்து மூட அதிகாரிகள் தயாராகி வருகின்றனர் . அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு முன் விரைந்து உரிய முறையில் பதிவு செய்யும் பட்சத்தில், மருத்துவ நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பிரச்சனையின்றி இயங்க உரிமம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications