தமிழக சட்டசபை.. மானியக்கோரிக்கை மீது இன்றுமுதல் விவாதம்.. புதிய அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள்!
சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் துறை ரீதியாக மானியக் கோரிக்கை விவாதம் இன்று தொடங்க உள்ளது. முதலாவதாக இன்று காலையில் நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை மானியக் கோரிக்கை நடக்கிறது. விவாதத்தில் எம்எல்ஏக்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து துறை சார்ந்த அமைச்சர்களான துரைமுருகன், சி.வீ.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர்.
தமிழ்நாடு சட்டசபை மார்ச் 20ஆம் தேதி கூடியது. அன்று 2023-24ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதையடுத்து 21ஆம் தேதி 2023-24ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

சட்டசபை கூட்டத்தொடர்
இதைத் தொடர்ந்து 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட், வேளாண்மை பட்ஜெட் ஆகிய 2 பட்ஜெட்கள் மீது விவாதம் நடந்தது. இதனிடையே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அதேபோல் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். தொடர்ந்து சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டது.

மானியக் கோரிக்கை
தொடர்ந்து சட்டசபை மீண்டும் கூடிய போது பட்ஜெட்கள் மீதான விவாதம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்கினர். இந்த நிலையில் இன்று முதல் ஏப்ரல் 21ஆம் தேதி வரை துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது. முதலாவதாக இன்று நீர்வளத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையும் நடக்கிறது.

புதிய அறிவிப்புகள்
விவாதத்தில் எம்எல்ஏ-க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளித்து துறை சார்ந்த அமைச்சர்களான துரைமுருகன், சி.வீ.கணேசன் ஆகியோர் புதிய அறிவிப்புகளை வெளியிடுவர். மாலையில் போக்குவரத்து மானியக்கோரிக்கை விவாதம் நடக்கிறது. அமைச்சர் சிவசங்கர் விவாதத்திற்கு பதில் அளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

அடுத்தடுத்து மானியக் கோரிக்கை
அதேபோல் நாளை உள்ளாட்சித் துறையும், ஊரக வளர்ச்சி துறையும், மார்ச் 31ஆம் தேதி உயர்கல்வி, பள்ளிக்கல்வித் துறையும், ஏப்ரல் 1ஆம் தேதி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை மானியக் கோரிக்கையும் நடைபெற உள்ளது. ஒவ்வொரு மானியக்கோரிக்கை அன்றும் மானியக்கோரிக்கைகளை தாக்கல் செய்து, புதிய அறிவிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் வெளியிட உள்ளனர்.












Click it and Unblock the Notifications