வலுவடைந்த காற்றழுத்தம்..புயலாக மாறுமா? வானிலையில் ஏற்படும் மாற்றத்தால் எங்கெங்கு மழை
சென்னை: வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பான அளவே பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் வடகிழக்குப் பருவமழை 15 சதவிகிதம் அதிக அளவில் பெய்துள்ளதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

இதன் காரணமாக 22.12.2022 வரைக்கும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 23 மற்றும் 24ஆம் தேதியன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
21.12.2022 மற்றும் 22.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
23ஆம் தேதியன்று மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையை நோக்கி இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications