புத்தாடைகள் அணிந்து... வாழ்த்து பரிமாறி.. தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்..!
சென்னை: தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதிகாலையிலேயே எண்ணெய் தேய்த்து குளித்து புத்தாடைகள் அணிந்து குடும்பத்தினருடன் மக்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். மாற்று மத நண்பர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து பரிமாறியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.
தமிழகத்தில் பரவலாக மழை பெய்தாலும் கூட பண்டிகை கொண்டாட்டம் வழக்கம் போல் காணப்படுகிறது. தீபாவளியை ஒட்டி தமிழகத்தின் முக்கிய கோயில்களில் காலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

குடும்பத்தினருடன் மக்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கோயில்களுக்கு சென்று வருகின்றனர். தனி மனித இடைவெளியை பின்பற்றுமாறு கோயில் நிர்வாகம் தரப்பில் மைக்கில் அறிவிக்கப்பட்டாலும், அது முழுமையாக பின்பற்றப்பட்டது போல் தெரியவில்லை.
புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயில் தஞ்சை பெரிய கோயில், ஸ்ரீவில்லிப்புதூர் ஆண்டாள் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி உச்சி பிள்ளையார் கோயில் என தமிழகத்தின் முக்கிய கோயில்கள் அனைத்தும் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
பட்டாசுகளை வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே அரசு அனுமதி வழங்கியுள்ளதால் அந்த நேரத்திற்குள் பட்டாசுகளை வெடிக்க இளசுகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனிடையே அரசு அறிவித்துள்ள நேரக்கட்டுப்பாட்டை நகர்ப்புறத்தில் முழுமையாக பின்பற்றப்பட்டாலும் கிரமப்புறங்களில் வெடிச்சத்தம் ஓய்ந்ததாக தெரியவில்லை.
கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக களையிழந்து காணப்பட்ட தீபாவளி கொண்டாட்டம் இந்தாண்டு உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்தாண்டு ஆட்டுச்சந்தைகளில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications