சபாநாயகர் அப்பாவு-வுக்கு சம்மன்..அதிமுக தொடர்ந்த அவதூறு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சென்னை: அவதூறு வழக்கில் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சம்மன் அனுப்ப எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்வானவர் அப்பாவு. தற்போது தமிழக சட்டசபையின் சபாநாயகராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் சென்னையில் கடந்த ஆண்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது அப்பாவு, ‛‛ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, 40 அதிமுக எம்எல்ஏக்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாகவும், அதை ஏற்க திமுக தலைவர் ஸ்டாலின் மறுத்துவிட்டார்'' என்று கூறியிருந்தார். அப்பாவுவின் இந்த கருத்துக்கு அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அப்பாவு தவறான தகவலை பதிவு செய்துள்ளார். அந்த கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும் என்று அதிமுக சார்பில் கூறப்பட்டது.
ஆனால் அப்பாவு தனது கருத்தை வாபஸ் பெறவில்லை. இதையடுத்து அதிமுகவின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசிய சபாநாயகருக்கு எதிராக, அதிமுக வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கோப்புக்கு எடுக்கப்படாததை அடுத்து, பாபு முருகவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாபு முருகவேலின் வழக்கை கோப்புக்கு எடுத்துக் கொண்டு சட்டப்படி நடவடிக்கையை தொடரும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதனையடுத்து இந்த வழக்கை கோப்புக்கு எடுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ் அல்லி, வழக்கின் விசாரணையை எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணைக்கு செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராகும்படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications