தீவிரமாக பரவும் டெங்கு.. கொசு உற்பத்தியை தடுக்க நடவடிக்கை தேவை.. பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
சென்னை: டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியை தடுக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஸ் எகிப்தி என்ற ஒருவகை கொசுவால் ஏற்படக்கூடியதே டெங்கு காய்ச்சல். சிக்குன் குனியா காய்ச்சலும் இந்த வகை கொசுவால்தான் ஏற்படுகிறது. மற்ற வகை கொசுக்களிலிருந்து ஏடிஸ் எகிப்தி வகை கொசுக்களை எளிதில் அடையாளம் கண்டுவிடலாம். இவற்றின் உடல் மற்றும் கால்களில் வெள்ளை நிற வரிகள் காணப்படும். அதனால் இவற்றை புலி கொசு' என்றும் கூறுவார்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் ஒருவரை ஏடிஸ் எகிப்தி கொசு கடிக்கும்போது, எளிதில் டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்பாகிறது.

டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், கேரளாவில் எலி காய்ச்சல், டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
பள்ளி, கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தியை தடுக்க ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகள் கண்டறியப்பட்டால் துணை சுகாதார இயக்குனர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை கண்காணிக்க மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொது சுகாதாரத்துறையால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என பொது சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தண்ணீர் தேக்கத் தொட்டிகள் அனைத்தையும் கொசு புகாத வண்ணம் இறுக்கமாக மூடி வைக்க வேண்டும் மேல்நிலை, கீழ்நிலை நீர் தேக்கத் தொட்டிகளை குளேரின் கலந்து உபயோகிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மழைநீர் தேங்காத வகையில் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்புக் குடிநீர், மலைவேம்பு இலைச்சாறு மற்றும் பப்பாளி இலைச்சாறு போன்ற சித்த மருத்துவ முறைகளைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications