பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று! இங்கிலாந்து அரசுடன் கரம் கோர்க்கும் தமிழக அரசு! மாசில்லா தமிழகம்!
சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக புதியதொரு உறுதியான செயல்திட்டத்தை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தமிழக அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இங்கிலாந்து அரசின் தொழில்நுட்ப உதவி மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை இணைந்து செயல்படுத்திட தேவையான ஒரு அறிக்கையை தயார் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
தமிழக பாஜக நிர்வாகிகள் 30 சதவீதம் மாற்றம்? பரபர பின்னணி
நேரில் ஆய்வு
சென்னை பெருங்குடியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கு வளாகத்தில் திடக் கழிவு மேலாண்மை தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா ஸாஹூ பார்வையிட்டார். அதன் பின்னர் பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்றுத் திட்டத்தை பெருங்குடி குப்பைக் கிடங்கு வளாகத்தில் துவக்கி வைத்தார். மேலும் அப்போது பெருங்குடி குப்பை கிடங்கில் நடைபெற்று வரும் மீள் உருவாக்கப் பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.
6 மாதங்களில்
ஜனவரி 1, 2019 முதல் மக்காத பைகள் (Non-degradable bags),ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது அனைவரும் அறிந்ததே. இனிவரும் 6 மாதங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தமிழ்நாடு அரசு மற்றும் இங்கிலாந்து அரசு இணைந்து காலநிலை மீள்தன்மையுடன் இணைந்த சூழல் நகரங்களை உருவாக்குவதற்கு, இந்தத் திட்டத்தின் கீழ் இங்கிலாந்து அரசின் தொழில்நுட்ப உதவி மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டத்தை இணைந்து செயல்படுத்திடதேவையான அடிப்படை விவரங்களுடன் கூடிய ஒரு அறிக்கையை தயார் செய்ய உள்ளது.
உறுதியான செயல்திட்டம்
இந்தத் திட்டம் பிளாஸ்டிக் மாற்றுப் பொருட்களுக்கான,உறுதியான செயல் திட்டத்தை செயல்படுத்தத்தக்க மற்றும் தகுதியை ஏற்படுத்தக்கூடிய வகையிலான ஒரு செயல்திட்டமாக இருக்கும். கழிவுகளை சரியாக கையாளாததால் ஏற்படக்கூடிய தீமைகளை, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள், காலநிலை மற்றும் சமூகம், சூழல் அமைப்பு ஆகியவைகளுக்கு எதிராக விடுக்கும் சவால்களை இது விரிவாக ஆராயும்.
இங்கிலாந்து ஒத்துழைப்பு
இந்தத் துறையில் ஒத்துழைக்க இங்கிலாந்து அரசு இந்தியாவிற்கு தனது முழு பங்களிப்பையும் அளிக்கத் தயாராக உள்ளது. தமிழகத்தில் ஏற்படும் காலநிலை மாற்ற தகவமைப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள 500 கோடி ரூபாய் செலவில் "தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை", அமைத்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. காலநிலை மாற்றத்திற்கான இந்தச் சிறப்பு முயற்சிகள் மூலம் 'டிரில்லியன் டாலர் பொருளாதாரம்' என்னும் இலக்கை நோக்கிய தமிழகத்தின் பயணத்திற்கு இது மிக உதவியாக இருக்கும்.