நாளை அதிகாலை அமெரிக்கா புறப்படுகிறார் ஓ.பி.எஸ்... 10 நாள் பயணம்
Recommended Video
சென்னை: துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நாளை அதிகாலை சென்னையிலிருந்து அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.
10 நாள் அரசு முறை பயணமாக செல்லும் ஓ.பி.எஸ். தமிழ்ச்சங்கங்கள் ஏற்பாடு செய்துள்ள பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.
அவரை அமெரிக்காவுக்கு வழியனுப்பி வைப்பதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அவரது ஆதரவாளர்கள் சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

10 நாள் பயணம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ராஜேந்திரபாலாஜி ஆகியோர் அமெரிக்கா சென்று திரும்பியுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். நாளை அமெரிக்கா புறப்படுகிறார். சென்னையிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை புறப்படும் அவர் அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைந்து அங்கு 3 நாட்கள் தங்க உள்ளார்.

ஆளுநருடன் சந்திப்பு
சிகாகோ நகர மேயர் மற்றும் இல்லினாய்ஸ் மாகாண ஆளுநரை சந்தித்துப் பேசவுள்ள ஓ.பி.எஸ்., தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். 10-ம் தேதி சர்வதேச சமுதாய ஆஸ்கர் விருதை பெறும் ஓ.பி.எஸ். 12-ம் தேதி வரை சிகாகோவில் தங்குகிறார்.

ஒரு நாள் பயணம்
நவம்பர் 13-ம் தேதி சிகாகோவில் இருந்து புறப்பட்டு வாஷிங்டன் டி.சி. செல்கிறார். அங்கு ஒரு நாள் மட்டுமே தங்கும் அவர் 14-ம் தேதி ஹூஸ்டன் நகருக்கு பயணிக்கிறார். அங்கு முக்கிய தொழிலதிபர்களை சந்தித்து அவர்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக அழைப்பு விடுக்கிறார். மேலும், 15-ம் தேதி ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்கான மின்னணு டோணர் பலகையை துவக்கி வைக்கிறார் ஓ.பி.எஸ்.

சென்னை திரும்புகிறார்
ஹூஸ்டன் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு 16-ம் தேதி நியூயார்க் நகருக்கு செல்லும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அங்கு தமிழ் அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டு நாட்கள் தங்குகிறார். பின்னர் 17-ம் தேதி அங்கிருந்து புறப்பட்டு சென்னை திரும்புகிறார் ஓ.பி.எஸ்.

முக்கிய அதிகாரிகள்
துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்.சின் அமெரிக்க பயணத்தின் போது அவருடன் நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன், மற்றும் பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் சிலரும் உடன் பயணிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications