"எங்களைப் பார்த்தா அக்காவுக்கு கோபம் வரத்தானே செய்யும்..” தமிழிசைக்கு உதயநிதி கொடுத்த ரிப்ளை!
சென்னை: 'எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு பதிலடி கொடுத்துள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திருவண்ணாமலையில் பல்வேறு பணிகளை நேற்று ஆய்வு செய்தார். , கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை நடத்திய உதயநிதி ஸ்டாலின், கிரிவலப் பாதையில் காரில் சென்று பக்தர்கள் வசதிக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.

கிரிவலப்பாதையில் கட்டப்பட்டு வரும் நவீன சுகாதார வளாக கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டு, பக்தர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, மேம்படுத்தப்பட்டு வரும் அருணகிரிநாதர் மணிமண்டபத்துக்கான பணிகள் - பக்தர்கள் தங்கும் இடம், பேவர் ப்ளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் ஆளுநரும், பாஜக நிர்வாகியுமான தமிழிசை சௌந்தரராஜன், “தம்பி உதயநிதி ஸ்டாலின், நேற்று கிரிவலம் போயிருக்கிறார். பவன் கல்யாண் சொன்னது உதயநிதி மனதில் தைத்துவிட்டது என்று நினைக்கிறேன். தவறுகளைத் திருத்திக்கொண்டு கிரிவலம் போக ஆரம்பித்திருக்கிறார் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி” எனத் தெரிவித்தார்.
உதயநிதி ஸ்டாலின் கிரிவலம் போயிருக்கிறார்.. பவன் கல்யாண் சொன்னது தைச்சிருச்சு போல.. தமிழிசை பரபர!
மேலும், “தமிழ்த்தாய் வாழ்த்தில் சில வரிகள் விடுபடுவது எனக்கும் ஒப்புதல் கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்து முழுமையாகப் பாடப்பட வேண்டும் என்பதில் நானும் உறுதியாக இருக்கிறேன். ஆனால், உள்நோக்கம் இல்லாமல் நடந்த ஒன்றுக்கு உள்நோக்கம் கற்பித்து பூதாகரமாக அரசியல் ஆக்குவது தவறு. முதல்வர் செல்லும் ஒரு நிகழ்வில் யாரோ தவறாகப் பாடினால் அதற்கு முதல்வர் பொறுப்பாக முடியாது” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மேலும், உதயநிதி கிரிவலம் சென்றதாக தமிழிசை கூறி இருப்பதையும் விமர்சித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது! அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் 'கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் 'சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல – 'சரி’ வலம்!

ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்! ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர் ஸ்டாலின்! 'எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!
நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது. ஒன்றிய அரசின் 'டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்!" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications