மாதம்பட்டி ரங்கராஜ் கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்தார்! ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்
சென்னை: நடிகர் மற்றும் சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கினார் என்றும் என் வயிற்றில் வளரும் அவரது குழந்தையை கலைக்கச் சொல்லி தன்னை அடித்துத் துன்புறுத்தினார் என்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சம்பவத்தின் பின்னணி
கோவையைச் சேர்ந்த மாதம்பட்டி ரங்கராஜ், 'மெஹந்தி சர்க்கஸ்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து 'கேசினோ', 'மிஸ் மேகி', 'பென்குயின்' ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். தமிழகத்தில் மிகவும் செல்வாக்குமிக்க நபர்களின் வீடுகளில் நடக்கும் சுப காரியங்களுக்கு மாதம்பட்டி ரங்கராஜ்தான் கேட்டரர்!
மாதம்பட்டி ரங்கராஜுக்கு ஏற்கெனவே அவரது மாமன் மகள் ஸ்ருதியுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக ரங்கராஜ் தனது மனைவியைப் பிரியப் போவதாகவும், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவை காதலித்து வருவதாகவும் பேச்சுகள் எழுந்தன.
ஜாய் கிரிஸில்டாவின் குற்றச்சாட்டுகள்
ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, 2018-ல் இயக்குநர் ஜே.ஜே. பெட்ரிக்கை திருமணம் செய்து, பின்னர் 2023-ல் பிரிந்துவிட்டதாக அறிவித்தார். சமீபத்தில், மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் நடந்துவிட்டதாகக் கூறி புகைப்படங்களை வெளியிட்ட ஜாய், அப்போது தான் ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், இருவரும் முத்தம் கொடுத்துக் கொள்ளும் வீடியோவையும் வெளியிட்டு, அதை ரங்கராஜ் தான் எடிட் செய்தார் என்று டேக் செய்திருந்தார்.
மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டிருந்த ஜாய், "ராஹா" என பெயர் சூட்டியதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது, முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் எப்படி இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடியும் என்ற கேள்விகளும் எழுந்தன. ஜாய் வெளியிட்ட எந்தப் புகைப்படங்களையும் ரங்கராஜ் மறுக்கவில்லை. ஆனால், அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து ஜாய் கிரிஸில்டாவுடன் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் நீக்கிவிட்டார்.
இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றிவிட்டார் என்றும், தன்னைக் கர்ப்பமாக்கிவிட்டுத் தன்னுடன் வாழ மறுப்பதாகவும் கூறி ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: "நானும் மாதம்பட்டி ரங்கராஜும் சில ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தோம். அதன்பிறகு எம்.ஆர்.சி. நகர் அம்மன் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் எங்களது திருமணத்தை பதிவு செய்யவில்லை. நான் எங்கள் திருமணம், குழந்தை உருவாகியிருப்பது குறித்து வெளியே சொன்னதற்கு பிறகு மாதம்பட்டி ரங்கராஜ் என்னை சந்தித்தார்.
கருவைக் கலைக்கச் சொல்லி என்னை அடித்து துன்புறுத்தினார்". இவ்வாறு ஜாய் கிரிஸில்டா தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் மாதம்பட்டி ரங்கராஜிடம் போலீஸார் விசாரணை நடத்துவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இத்தனை நாட்கள் மவுனமாக இருந்த மாதம்பட்டி ரங்கராஜ், இனியாவது வாய்விட்டு பேசுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications