இந்த 35 ஆண்டுகால பணி காலத்தில்.. விடைபெறும் நாளில் எமோசனலாக பேசிய டிஜிபி ராஜேந்திரன்
சென்னை: தனது 35 ஆண்டுகால பணிக்காலத்தை சட்டத்துக்கு உட்பட்டும் மனசாட்சிக்கு உட்பட்டும் பணியாற்றி உள்ளதாக பிரிவு உபச்சார விழாவில் தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழக டிஜிபி டிகே ராஜேந்திரன் இன்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதன் காரணமாக தமிழகத்தின் 29வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக திரிபாதி பதவியேற்றார். இந்நிலையில் இன்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் டிஜிபி டிகே ராஜேந்திரனுககு பிரிவு உபச்சார விழா நடந்தது. இதில் ஏராளமான காவல் அதிகாரிகள் கலந்து கொண்டு அவருக்கு பிரியா விடை கொடுத்து அனுப்பினார்கள்.

அப்போது டிஜிபி ராஜேந்திரன் கூடியிருந்தவர்கள் மத்தியில் உருக்கமாக பேசுகையில், " காவல்துறையில் சுமார் 35 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளேன். காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியை முடித்து ஓய்வு பெறும் இந்த நேரத்திலேயே, என்னை காவல்துறையின் தலைமை இயக்குனராக பணியாற்ற வாய்ப்பு அளித்த தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியினை நினைவுகூற விரும்புகிறேன். அதனைத் தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை 1 முதல் என்னை காவல்துறையின் தலைமை இயக்குனராகவும், காவல்துறை தலைமை அதிகாரியாகவும் நியமித்த தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் எனது மனமார்ந்த நன்றி.
எனது ஒட்டுமொத்த 35 ஆண்டுகால பணிக்காலத்தை சட்டத்துக்கு உட்பட்டும் மனசாட்சிக்கு உட்பட்டும் பணியாற்றி உள்ளேன். சிறப்பான பணியை செயல்படுத்துவதற்கு ஒவ்வோர் ஆண் மற்றும் பெண் காவலர்கள் மற்றும் சக அதிகாரிகள் என்னோடு தோளோடு தோள் நின்று செயலாற்றி உள்ளீர்கள். உங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் காரணமாக பணியை சிறப்பாக செயல்படுத்த முடிந்தது.
இந்த பணிகளை என்னோடு இணைந்து முழுமனதுடன் செய்து, முடிக்க அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். கடந்த மூன்றாண்டு காலத்தில் தமிழக காவல்துறை பல சோதனைகளையும், சவால்களையும் சந்தித்து இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் டிசம்பர் 5, 2014 மக்களுக்கு தாங்கொண்ணா துயரத்தை தந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்பாராத மரணம். 2017 தமிழகம் தழுவி நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு போராட்டங்கள் மற்றும் புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது தமிழக காவல்துறை மேற்கொண்ட பாதுகாப்பு, துயர் துடைக்கும் மறுவாழ்வு பணிகள். மற்றும் இடைத் தேர்தலுக்கான காவல் பணிகள், நடந்து முடிந்த லோக்சபா பொதுத்தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் இதுபோன்று கடந்த மூன்று ஆண்டுகளில் பல விதமான சவால்களை சோதனைகளை தமிழக காவல்துறை சந்தித்துள்ளது இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications