பாஜகவின் கற்பனை தமிழகத்தில் எடுபடாது... தயாநிதி மாறன் எம்.பி. சாடல்
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் கற்பனை தமிழகத்தில் ஒரு போதும் எடுபடாது என திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பாஜக பலம் வாய்ந்த கட்சியாக உள்ளது என நினைத்து அந்தக் கட்சியினர் கற்பனையில் மிதப்பதாக விமர்சித்துள்ளார்.
மேலும், சிறிய சிறிய சர்ச்சைகளை ஏற்படுத்துவதே பாஜகவின் பணியாக உள்ளது என தயாநிதி சாடினார்.
குளித்தலை திமுக எம்எல்ஏ ராமருக்கு கொரோனா உறுதி - திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
கருணாநிதி நினைவுநாள்
கருணாநிதி 2-ம் ஆண்டு நினைவுநாளை ஒட்டி சென்னை மேற்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற மத்திய சென்னை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பாஜகவை கடுமையாக சாடினார். வரும் சட்டமன்றத் தேர்தலில் யாரை முதலமைச்சராக்க வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி எனவும் தெரிவித்தார்.
தமிழகத்தில் எடுபடாது
பாஜகவினர் தமிழகத்தில் தேவையின்றி சர்ச்சையை உருவாக்கி வருவதாகவும் இதன் மூலம் பலம் வாய்ந்த கட்சியாக பாஜக உருவெடுத்துவிட்டது போல் கறபனையில் மிதப்பதாகவும் விமர்சித்துள்ளார். அதிமுக ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்றும் பாஜகவின் நோக்கம் இங்கு நிறைவேறாது எனவும் தயாநிதி மாறன் கூறியுள்ளார்.
தயாநிதி கண்டனம்
இதனிடையே கனிமொழி எம்.பி.யிடம் நீங்கள் இந்தியரா எனக் கேட்ட மத்திய தொழிற் பாதுகாப்பு படைக்கு தனது கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் இந்தி தெரிந்தால் தான் இந்தியர் எனக் கருதுவது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்துள்ளார். மேலும், ஒரு எம்.பி.க்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்கள் எப்படி அலைக்கழிக்கப்படுவார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருவதாக கூறியுள்ளார்.
மொழி தெரிந்த
தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிந்தால் மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் இன்னும் கூடுதலாக அலைக்கழிப்பதாகவும், இதனால் இனி வரும் நாட்களில் அனைத்து விமான நிலையங்களிலும் அந்த மாநில மொழி பேசும் நபர்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.