இப்போதான் புரியுது தோனி பிளான்.. அவசரப்பட்டு திட்டிட்டோமோ.. சூப்பர் கேப்டன்யா.. ரசிகர்கள் உருக்கம்
சென்னை: அவசரப்பட்டு தோனியை திட்டி விட்டோமோ.. தல என்ன செய்தாலும் அது சரிதான் என்று சொல்லத் தொடங்கியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான மிகப்பெரிய இலக்கை விரட்டிச் சென்றபோது தோனி ஆரம்பத்தில் அடித்து ஆடவில்லை என்பதுதான் அவர் மீதான விமர்சனத்திற்கு காரணம்.
களத்தில், முன்கூட்டியே இறங்காமல் இருந்ததும் ரசிகர்களை முணுமுணுக்க செய்தது.

மெல்ல ஆடியும் தோனி
தோனி கடந்த பல போட்டிகளில் மெல்ல மெல்லத் தான் ஆடுகிறார் என்பதால், அவரது திறமை மழுங்கிப் போய் விட்டதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் குமுறினர். கடைசி ஓவரில் 3 சிக்சர்கள் விளாசி போதிலும் அதை முதலில் ஏன் செய்யவில்லை என்ற கேள்வியை அவர்கள் எழுப்பினர்.

கொல்கத்தா டீம் செய்த தப்பு
முந்தாநாள், இப்படித்தான், மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 196 என்ற பெரிய இலக்கை துரத்திச் சென்றது கொல்கத்தா அணி. ஆனால், 146 ரன்களை சேர்ப்பதற்குள் 20 ஓவர்கள் முடிந்துவிட்டது. ஏனெனில் எந்த பேட்ஸ்மேனும் பார்ட்னர்ஷிப் கொடுக்கவில்லை. இதனால் அவர்களின் ரன்ரேட் -2.450 என்ற அளவுக்கு சரிந்து புள்ளி பட்டியலில் கீழே இருக்கிறது.

சுருண்ட ஆர்சிபி
நேற்றும் இதேபோலத்தான். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 206 ரன்கள் குவித்தது. இரண்டாவது பேட் செய்த பெங்களூரு அணி அடிக்க வேண்டுமே என்ற டென்ஷனில் வெறும் 109 ரன்களுக்கு மொத்தமாக சுருண்டது. எனவே பெங்களூர் ரன் ரேட் -2.175 என்ற வகையில் சரிந்து விட்டது. கடைசி 2 இடங்களை முறையே, கொல்கத்தாவும், பெங்களூரும் பெற்றுள்ளன.

ரன் ரேட்டை பாருங்க
அதேநேரம், சென்னை அணி ராஜஸ்தானுக்கு எதிராக 217 என்ற இமாலய இலக்கை துரத்திய போதும், 200 ரன்களை எட்டியது. எனவே ரன் ரேட்டில் பெரிய பாதிப்பு இல்லை. சிஎஸ்கே ரன் ரேட் -0.145 என்ற அளவில் உள்ளது. ஒருவேளை தோனி முதலிலேயே அடித்து ஆடி அவுட்டாகி இருந்தால் இந்த அளவுக்கு நமக்கு ரன் ரேட் கிடைத்து இருக்காது. ரன் ரேட் என்பது, பிளே ஆப் சுற்றுக்கு போக ரொம்பவே முக்கியம்.

நல்ல திட்டம்
அனுபவம் இல்லாத ஒரு பந்து வீச்சாளர் பவுலிங் போட்ட கடைசி ஓவரில்தான் தோனி 3 சிக்சர்களை விளாசினார் என்ற விமர்சனத்தை இப்போது பாசிட்டிவாக பார்க்கிறார்கள் ரசிகர்கள். அனுபவமில்லாத பந்துவீச்சாளரை அடித்ததும் ஒரு நல்ல உத்தி தான். ஆர்ச்சர் போன்ற அனுபவமிக்க பவுலரை அடிக்க முயன்று தோனி அவுட்டாகியிருந்தால் இந்த அளவு ரன் ரேட் வந்திருக்காது. தோற்றுப் போவது உறுதி என்று தெரிந்துதான் தோனி ரன் ரேட்டை அதிகரிக்க கடைசி ஓவரை பயன்படுத்தினார் என்று ரசிகர்கள் சொல்கிறார்கள்.

தோனியிடம் ஒரு கேள்வி
இருப்பினும் தோனி விஷயத்தில் இன்னும் ஒரு கேள்வி தொக்கி நிற்கிறது. கேதர் ஜாதவ் எந்த அளவுக்கு பொறுமையாக ஆடுவார் என்று தோனிக்கு மட்டுமல்ல.. உலகிற்கே தெரியும். ஆனால் ரன்னை விரட்டி பிடிக்க கூடிய நிலையில் சிஎஸ்கே இருந்தபோது தோனி இறங்காமல் கேதர் ஜாதவ் களமிறங்கியதைத்தான் இதுவரை ஜீரணிக்க முடியவில்லை. சாம் கர்ரன் அதிரடி ஆட்டக்காரர். அவரை முன்பாக களமிறக்கியது கூட நியாயம். கேதர் ஜாதவை முன்னால் இறக்கிவிட்டு தோனி மிகவும் தாமதமாக வந்தது வெறும் ரன் ரேட்டுக்காகத்தான் என்றால் அதை எப்படி ரசிகர்கள் பொறுப்பார்கள்? வெற்றி பெற வாய்ப்பு இருக்கும்போது வெற்றிக்காகப் போராடி இருக்க வேண்டாமா என்ற கேள்விக்குத்தான் இன்னும் விடை கிடைக்கவில்லை.












Click it and Unblock the Notifications