Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்கல் கைகளுக்கே தெரியாதாம்.. டைரக்ட் 'டீலிங்' அங்கயாமே.. மூவர் அணிக்கு ஷாக் கொடுத்த சரவணன் ‘டைவ்‘!

Subscribe to Oneindia Tamil

சென்னை : டாக்டர் சரவணன் இன்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த போது, மதுரையின் முக்கியமான அதிமுக நிர்வாகிகள் யாருமே அவருடன் இல்லை. மதுரை அதிமுகவின் அதிகார மையங்களான ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா ஆகியோரை மீறி, நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியிடம் பேசி அதிமுகவில் இணைந்திருக்கிறாராம் சரவணன். இதனால் மதுரை அதிமுக வட்டாரத்தில் இப்போதே சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன.

பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார். மதிமுக, திமுக, பாஜக ஆகிய கட்சிகளில் இருந்து விலகிய சரவணன் 4வது கட்சியாக அதிமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இருந்து விலகிய டாக்டர் சரவணன் திமுகவில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைமை பச்சைக்கொடி காட்டததால் அப்செட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் தான் திடீரென எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

டாக்டர் சரவணன்

டாக்டர் சரவணன்

மதுரை மாவட்டத்தில் முக்கிய அரசியல் பிரமுகர்களில் ஒருவரான டாக்டர் சரவணன் பாஜகவில் செயல்பட்டு வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்தின் போது பாஜகவிலிருந்து விலகினார். காஷ்மீரில் மரணமடைந்த லெட்சுமணன் உடல் மதுரை விமான நிலையம் வந்த நிலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது லெட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வந்தபோது பாஜகவை சேர்ந்தவர்கள் அவரது கார் மீது காலணி வீசினர்.

அதிமுகவில் சேர்ந்தார்

அதிமுகவில் சேர்ந்தார்

இந்தச் சம்பவம் தொடர்பாக அன்று இரவே அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்த டாக்டர் சரவணன் மன்னிப்பு கேட்டு, அப்போதே பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஓவர் நைட்டில் டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகியது அரசியல் அரங்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் திமுகவில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாக்டர் சரணவன் இன்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து அதிமுகவில் இணைந்துள்ளார்.

திமுகவில்

திமுகவில்

மதிமுகவில் செயல்பட்டு வந்த டாக்டர் சரவணன் 2015 மதிமுகவில் இருந்து விலகி பின்னர் திமுகவில் 2016-ல் இணைந்தார். திமுகவில் அவருக்கு மருத்துவ அணி துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட இவருக்கு சீட் வழங்கப்பட்டது. இந்தத் தேர்தலில் அதிமுகவின் ஏகே போஸ் வெற்றி பெற்றார். ஆனால், அவர் காலமானதால் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏவானார். அதன்பின் 2021 தேர்தலில் அவருக்கு கட்சியில் சீட் கிடைக்காததால் திமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். 2021ஆம் பாஜகவில் இணைந்த அவர் ஓராண்டில் அந்த கட்சியில் இருந்து விலகினார்.

ஒவர் நைட்டில்

ஒவர் நைட்டில்

பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களிலேயே சரவணனுக்கு மதுரை வடக்கு தொகுதி சீட் கிடைத்தது. தேர்தலில் தோல்வியடைந்தாலும் அதிக வாக்குகளை பெற்றதால் பாஜகவில் மதுரை மாநகர செயலாளர் பதவி சரவணனுக்கு வழங்கப்பட்டது. அதன்பிறகு மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நெருக்கமாக இருந்து வந்தார் சரவணன். திமுக, அதிமுகவிற்கு இணையாக மதுரை பாஜகவில் அதிக கூட்டத்தை திரட்டி ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்களை நடத்தி அதிரடி காட்டி வந்தார். இந்த நிலையில் தான் பிடிஆர் காரில் காலணி வீசிய சம்பவத்தன்றே ஓவர் நைட்டில் அக்கட்சியில் இருந்து விலகினார். பின்னர் திமுகவில் இணைய முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். எனினும், தலைமையின் சிக்னல் கிடைக்கவில்லை.

திருமண அரசியல்

திருமண அரசியல்

தனது அரசியல் வாழ்க்கையில் அடுத்தது என்ன செய்யலாம் என்ற தீவிர யோசனையில் இருந்த அவருக்கு தனது மகன் திருமணம் ஒரு வாய்ப்பாக அமைந்தது. அதனை பயன்படுத்தி கட்சி பேதம் பார்க்காமல் அனைவருக்கும் அழைப்பிதழ் வைத்தார். அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், ராஜகண்ணப்பன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சரவணன் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டனர். அமைச்சர் பிடிஆர் தான் திருமணத்திற்கு தலைமை தாங்கி நடத்தி வைத்தார். இதனால் திமுகவில் டாக்டர் சரவணன் மீண்டும் ஐக்கியமாகலாம் என கணிக்கப்பட்டது.

2 ரூட்

2 ரூட்

டாக்டர் சரவணனின் மகன் திருமணத்தின்போது, மதுரை முழுவதும் முதல்வர் ஸ்டாலின் படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அதேபோல, ஓபிஎஸ் படங்களைப் போட்டும் பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால், சரவணன் இரண்டு பக்கமும் ரூட்டைப் போடுகிறார், எந்தப் பக்கம் சிக்னல் கிடைக்கிறதோ அங்கு செல்லப்போகிறார் என்ற பேச்சுகள் எழுந்தன. திமுக தலைமையின் கண்ணசைவுக்காக பல மாதங்களாக காத்திருந்த டாக்டர் சரவணன், அங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படாததால் தற்போது அதிமுகவில் இணைந்துள்ளார்.

மூவர் அணியை மீறி

மூவர் அணியை மீறி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்துள்ளார் டாக்டர் சரவணன். இந்த சந்திப்பின்போது ஈபிஎஸ் அணியின் மதுரை அதிகார மையங்களான, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், முன்னாள் மதுரை மேயர் விவி.ராஜன் செல்லப்பா ஆகிய யாருமே பங்கேற்கவில்லை. அதனால், அவர்களை மீறித்தான் டாக்டர் சரவணன் அதிமுகவில் சேர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

 யாருக்குமே தெரியாதா

யாருக்குமே தெரியாதா

நேரடியாகவே எடப்பாடி பழனிசாமியிடம் போனில் பேசிய டாக்டர் சரவணன், என் மீது நம்பிக்கை வைத்து பணியைக் கொடுங்கள் எனப் பேசி எடப்பாடி பழனிசாமி ஓகே சொன்னதும் உடனடியாகச் சேர்ந்துவிட்டார் என்கிறார்கள் மதுரை அதிமுகவினர். டாக்டர் சரவணன் இன்று அதிமுகவில் சேரப்போவது நேற்று வரை மதுரையின் முக்கிய அதிமுக புள்ளிகளுக்கே தெரியாதாம். திமுக, பாஜகவில் இருந்தபோது தங்களுக்கு எதிராக அரசியல் செய்த சரவணன், இப்போது அதிமுகவில் சேர்ந்துள்ளபோதும், தங்களை மீறிச் செயல்படுவதை மதுரை அதிமுகவின் முக்கிய புள்ளிகளான மூவர் ரசிக்கவில்லை என்று பேச்சுகள் எழுந்துள்ளன. இதனால், டாக்டர் சரவணனால், மதுரை அரசியலில் மீண்டும் கோலோச்ச முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+