எங்கே செல்லும் இந்த பாதை? எடப்பாடி பழனிசாமி அதுக்கு சம்மதிப்பாரா? தமிழகத்தில் "மொட்டு" விடுதா தாமரை?
சென்னை: எப்படியாவது தமிழகத்தில் 10 தாமரைகளையாவது வென்றுவிட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக முனைப்பு காட்டி வருகிறது.. இதுகுறித்த முக்கிய வியூகம் ஒன்றையும் வகுத்துள்ளதாம்.
பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் இராம.சீனிவாசன் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் சொல்கிறார், "அதிமுக, பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டால், இண்டியா கூட்டணிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காது என்கிறது கருத்துக் கணிப்புகள்..

கூட்டணி: அதனால், திமுகவை வீழ்த்துவதற்குதான் அதிமுகவை கூட்டணிக்காக நாங்கள் அழைக்கிறோமே தவிர, மத்தியில் ஆட்சி அமைப்பதற்காக கிடையாது.. அதிமுகவுக்குதான் தமிழகத்தில் ஆட்சி அமைக்க பாஜகவின் தயவு தேவைப்படும். ஆனால், மோடி பிரதமராக பாஜவுக்கு அதிமுகவின் தயவு தேவையில்லை" என்று ஆணித்தரமாக எடுத்து கூறியிருக்கிறார்.
இதுஒருபுறமிருந்தாலும், வெளியாகும் தகவல்களோ வேறுவிதமாக கசிந்து கொண்டிருக்கிறது. அதாவது, இந்த முறை அதிமுகவுடனான கூட்டணிக்கு பாஜக கடுமையாக முயற்சித்தது.. பல மாத காலம் காத்திருந்தது.. தூது படலமும் மேற்கொள்ளப்பட்டது. டெல்லியிலிருந்து சில சீனியர் தலைவர்களே வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வாசன் சமாதானம்: போதாக்குறைக்கு ஜிகே வாசன் போன்ற தோழமை கட்சி தலைவர்களும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை.. இறுதிவரை, பாஜகவுடனான கூட்டணி கிடையாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார்.. எனவே, பாஜக தனித்து போட்டியிட தயாராகி வருகிறது. இதற்காகவே, பிரதமர் மோடி, அடிக்கடி தமிழகம் வந்து கொண்டிருக்கிறார்.
எனினும், தமிழகத்தில் காலூன்ற அதிமுகவின் தயவும் பாஜகவுக்கு தேவையாக இருப்பதாகவே தெரிகிறது. அதனால்தான் தற்போது ஒரு வியூகத்தை கையில் எடுத்திருக்கிறதாம். அதன்படி, பாஜக வேட்பாளராக நிறுத்தும் முக்கிய 6 தொகுதிகளிலும், அதிமுக சார்பில் பிரபலமில்லாத வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாம்.
சாதாரண வேட்பாளர்: பாஜகவை பொறுத்தவரை, தமிழகத்தில் கோவை, தென்சென்னை, கன்னியாகுமரி, நீலகிரி உட்பட 6 தொகுதிகளில் பலமாக உள்ளது.. இந்த 6 தொகுதிகளிலுமே அதிமுகவும் பலமாக உள்ளது.
அதனால்தான், பலம்வாய்ந்த வேட்பாளரை நிறுத்திவிடாமல், சாதாரண வேட்பாளரை நிறுத்தினால், அது தாங்கள் வெற்றிபெற மறைமுக உதவியாக இருக்கும் என்று கணக்கு போடுகிறதாம்.. ஏற்கனவே இரட்டை இலை முடக்குவது உட்பட ஒருசில நெருக்கடிகள் ஏற்பட்டுவரும் நிலையில், பாஜகவின் வெற்றிக்கு அதிமுக தரப்பு எந்த அளவுக்கு உதவும் என்று தெரியவில்லை.
ஆதரவு: அதேபோல, பாஜக கூட்டணிக்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவுகளை திரண்டு தந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், பாஜகவுக்கு வாக்களிக்க பிராமணர் சங்கம் ஆதரவு தந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, மோடியை, 3-வது முறையாக பிரதமராக பதவியேற்க செய்திடவும், தாமரை சின்னத்தில் வெற்றி பெறச்செய்வது என்றும், தேசிய கண்ணோட்டத்தில் பாஜக கூட்டணிக்கு வாக்களிப்பது என்றும் இந்த சங்கத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கிறதாம்.
இதுபோலவே, கொங்குநாடு முன்னேற்ற கழகமும் தன்னுடைய ஆதரவை பாஜகவுக்கு தெரிவித்துள்ளது. திருப்பூரில் உள்ள கொமுக நிறுவன தலைவர் பெஸ்ட் ராமசாமியின் வீட்டுக்கு சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அவருக்கு நன்றியும் தெரிவித்திருக்கிறார்.
பரபரப்பு: ஆக, பாஜகவுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவுகள் குவிந்து வருகின்றன என்றாலும், அதிமுகவின் உதவியையும் மறைமுகமாக வேண்டுவதாக தகவல்கள் சோஷியல் மீடியாவில் கசிந்துவருவது பரபரப்பை கிளப்பி கொண்டிருக்கிறது... இந்த தகவல்கள் எல்லாம் நிஜமா?ன்னு வேற நமக்கு தெரியலையே.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!












Click it and Unblock the Notifications