எடப்பாடி பழனிசாமியின் இன்றைய பேட்டியை கவனித்தீர்களா.. ஓபிஎஸ் சந்திக்க போகும் புதிய சவால்
ஒரு சிலரை தவிர அதிமுகவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி பக்கம் ஓபிஎஸ் அணியில் உள்ளவர்கள் வரலாம் என்பதற்கு சமிக்கையாக பார்க்கப்படுகிறது.
சென்னை: பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்தும் செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றமே கூறிவிட்டதால் இனி அதிமுக தலைமை குறித்து எந்த கேள்வியும் இல்லை. ஒரு சிலரை தவிர அதிமுகவுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதால், எடப்பாடி பழனிசாமி பக்கம் ஓபிஎஸ் அணியில் உள்ளவர்கள் வரலாம் என்பதற்கு சமிக்கையாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஓபிஎஸ்யை தனிமரம் ஆக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாகவே அரசியல் நோக்கர்கள் பார்க்கிறார்கள்.
ஓபிஎஸ், சசிகலா, தினகரன் மூன்று பேரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு வரலாம் என்று ஜெயக்குமார் இன்று காலை பேட்டி அளித்தை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமியுடன் ஒரு சிலரை தவிர யார் வேண்டுமானாலும் அதிமுகவிற்கு வரலாம் என்று அதே கருத்தையே வெளிப்படுத்தி உள்ளார். முழுமையாக தன் கட்டுப்பாட்டில் அதிமுகவை கொண்டு வந்துள்ள எடப்பாடி பழனிசாமி, இனி ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானத்திற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடர்ந்த வழக்கில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பு காரணமாக கடந்த மே மாதத்தில் இருந்து அதிமுகவில் நடந்த உட்கட்சி மோதலுக்கு தீர்வு கிடைத்து உள்ளது. இந்த தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாக வந்துள்ளால் அவரும், அவரது ஆதரவாளர்களும் உற்சாகமாக உள்ளனர்.

அதிமுக வழக்கு
உச்ச நீதிமன்றம் இன்று என்ன தீர்ப்பு கொடுத்தது? அதிமுக பொதுக்குழு ஜூலை 11ம் தேதி நடந்தது செல்லும். அதிமுக பொதுக் குழுவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்கிறோம். அதிமுக பொதுக் குழு வழக்கில் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை ஏற்கிறோம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதோடு பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது. அதோடு ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டதும் செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதிமுகவின் வெற்றி
இதனால் உற்சாகம் ஆன அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் அற்புதமான தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீதி, நேர்மை, தர்மம் வென்றுள்ளது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களுக்கு இந்த தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, என்று கூறினார். ஓபிஎஸ் குறித்த கேள்விக்கு தீர்ப்பு வந்துவிட்டது. கட்சியில் வழக்கு முடிந்துவிட்டது. அதோடு அவரின் "இதுவும்" முடிந்துவிட்டது. இனி அவருக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த வெற்றி என்னுடைய வெற்றி இல்லை. அது அதிமுகவின் வெற்றி.

எடப்பாடி பேச்சு
அதிமுக தொண்டர்களின் வெற்றி. இனி பொதுச்செயலர் தேர்தல் தொடர்பாக முடிவு எடுப்போம் கட்சி நிர்வாகிகளை சந்தித்து முடிவு எடுப்போம். அவர்கள் சிவில் கோர்ட் போனால் போகட்டும். உச்ச நீதிமன்றம் பெரிய நீதிமன்றம். அதில் நாங்கள் வென்றுவிட்டோம். கட்சிக்காகபாடுபட்டவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்து இருக்கிறோம். கட்சிகள் உழைத்தவர்களை அழைத்து உள்ளோம். ஒரு சிலரை தவிர மற்றவர்களை வரவேற்போம். ஒரு சிலரை தவிர யார் வந்தாலும் ஏற்றுக்கொள்வோம். அந்த ஒரு சிலரை நாங்கள் ஏற்கலாம். "அவர்"தான் கட்சியில் இல்லை என்று ஆகிவிட்டதே. உச்ச நீதிமன்றமே அவரை நீக்கியது சரி என்று ஆகிவிட்டதே. இனி என்ன சேர்த்துக்கொள்வது" என்று கூறினார்.

அனைவரும் வரலாம்
இந்த பேட்டியின் மூலம் ஓ பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை என்பதை மறைமுகமாகவும் நேரடியாகவும் கூறிவிட்டார் எப்பாடி பழனிசாமி. ஆனால் எடப்பாடி பழனிசாமி கூறிய கவனித்தீர்கள் என்றால், கட்சிக்காகபாடுபட்டவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்து இருக்கிறோம். கட்சிகள் உழைத்தவர்களை அழைத்து உள்ளோம். ஒரு சிலரை தவிர மற்றவர்களை வரவேற்போம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் ஓ பன்னீர்செல்வம் அணியில் உள்ள ஓரு சிலரை தவிர அனைவரையும் எடப்பாடி பழனிசாமி வரவேற்க தயாராக இருக்கிறார் என்பதை காட்டுகிறது. ஏற்கனவே ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடவாய்ப்பு கிடைக்காததால், அந்த ஊரைச்சேர்ந்த ஓபிஎஸ் அணியினர் கூண்டோடு எடப்பாடி பக்கம் தாவி விட்டனர். இனி மற்றவர்களும் எடப்பாடி பக்கம் தாவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால், அடுத்தடுத்த நாட்களில் இந்த காட்சிகள் அரங்கேற வாய்ப்பு உள்ளதாம். இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி ஓ பன்னீர்செல்வத்தை தனிமரமாக்க விரும்புவதாகவே கூறப்படுகிறது.

பெரிய நம்பிக்கை
ஓ பன்னீர்செல்வம் அணியில் உள்ள முக்கிய தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் வருவதற்கு கூட வாய்ப்பு உள்ளதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அரசியலில் வெற்றி பெறுபவர்கள் பக்கமே தொண்டர்கள், நிர்வாகிகள் நிற்க விரும்புவார்கள் என்பதால், இனி ஓபிஎஸ் கூடாரம் காலியாகும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள். ஓபிஎஸ்க்கு உள்ள சவால் என்னவென்றால், இனி இருக்கும் அவரது ஆதரவாளர்களை, முக்கிய நிர்வாகிகளை தன் பக்கமே தக்க வைப்பாரா என்ற கேள்வி எழுவதாகவும், அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணிக்கு கடுமையான பலத்தை காட்ட விரும்பிய எடப்பாடிக்கு இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. எனவே இனி திமுகவிற்கு எதிராக கடுமையாக பிரச்சாரத்தில் இறக்குவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications