சென்னைக்கு வந்த வித்தியாசமான விநாயகர்! பக்கத்துல யாரு? அணிலா, எலியா?
சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விஜய் வடிவில் அவருடைய கட்சியின் பெயர் பொதித்த பேட்ஜுடன் ஸ்டைலாக ஒரு பிள்ளையார் தயாரிக்கப்பட்டு சென்னை பட்டினம்பாக்கம் கடற்கரைக்கு விஜர்சனத்திற்காக கொண்டு வரப்பட்டது. அதன் அருகே இருந்தது எலியா, அணிலா என கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு சற்று பெரிதாக இருந்தது.
விநாயகர் சதுர்த்தி கடந்த 7ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக மக்கள் வீடுகளில் பிள்ளையார் வாங்கி வைத்து வழிபட்டனர். அது போல் சாலைகளிலும் இந்து அமைப்பினர் பெரிய அளவிலான பிள்ளையார் சிலைகளை வைத்து வழிபட்டனர்.

இந்த நிலையில் 9ஆவது நாளான நேற்றைய தினம் அந்த விநாயகர்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்ட நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன. இதற்காக சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் மாற்றமும் ஏற்பட்டுள்ளது. சென்னையில் விநாயகர் சிலைகள் ஸ்ரீனிவாசபுரம், பட்டினம்பாக்கம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்பட்டது.
இதனால் காமராஜர் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலையில் பாதசாரிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும். எனவே மக்களின் நடமாட்டத்திற்கு ஏற்ப போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கடற்கரைகளுக்கு கரைப்பதற்காக வந்த விநாயகர் சிலைகள் சற்று வித்தியாசமாக இருந்தன. அவைகளில் முக்கியமானது, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பேட்ஜ் அணிந்திருந்த பிள்ளையார்தான். பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு இடுப்பில் கையை வைத்துக் கொண்டு விஜய் மாதிரியே இருந்தது.
பிள்ளையார் தனது தும்பிக்கையை கொண்டு விசில் அடிப்பது போன்றும் பிள்ளையார் இருந்தது. அதன் அருகே வெள்ளை நிறத்தில் சட்டை போட்டு கொண்டு கருப்பு நிறத்தில் எலி இருந்தது. அது எலியா இல்லை அணிலா என்பது சற்று சந்தேகமாக இருந்தது.
இந்த ஆண்டு இதுதான் வித்தியாசமாக இருந்தது. இது போல் வேறு சில சிலைகளும் இருந்தன. பட்டினம்பாக்கம் உள்ளிட்ட விநாயகர் சிலை கரைக்கும் இடங்களில் எல்லாம் அதிக கூட்டம் நெரிசல் இருந்தது. இதனால் போலீஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
பல இடங்களில் பிள்ளையார் சிலைகள் கரையாமல் இருப்பதாகவும் அவை சுற்றுச்சூழலுக்கு மாசை ஏற்படுத்தும் என்றும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் விஜர்சனத்தை அடுத்து கடலோரங்களில் மாலைகளும் பிளாஸ்டிக் பொருட்களும், கரை ஒதுங்கியுள்ளன.
விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார். அவர் வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் விஜய் ரசிகர்கள் விஜய்யை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்க விரும்பி அவரை போன்ற ஒரு பிள்ளையாரை செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications