தந்தை மாற்றுத்திறனாளி.. தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்.. பெற்றோரை பெருமை பொங்க வைத்த சந்தோஷினி!
சென்னை: தந்தை மாற்றுத்திறனாளி, தாய் உடல்நிலை பாதிக்கப்பட்டவர், படிப்பில் கெட்டியான சந்தோஷினி, பத்தாம் வகுப்பு தேர்வில் தான் பெற்ற மதிப்பெண்களால் பெற்றோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாக 91.55 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது தேர்வு எழுதிய 8,94264 பேரில், 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் அதிக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் 87.90% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் பள்ளிகளில் 93.80% மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் திண்டுக்கல், நெல்லை, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த 3 மாணவிகள் 499 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.
10 வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாணவி சந்தோஷினி, மாநகராட்சி பெண்கள் பள்ளியில் படித்து, 488 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியுள்ளார். மாணவி சந்தோஷினியின் தந்தை மாற்றுத்திறனாளி, தாயும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்.
ஏழ்மையான குடும்பச் சூழல் என்றபோதும், மாற்றுத்திறனாளி தந்தைக்கும், உடல் நலம் குன்றிய தாய்க்கும் அன்றாடம் உதவி செய்து வந்ததோடு, விடாமுயற்சியுடன் படித்து 488 மதிப்பெண்களைப் பெற்று அசத்தியுள்ளார் சந்தோஷினி.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, புத்தா தெரு மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவி சந்தோஷினி, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்களை பெற்று சாதித்துள்ள நிலையில், அவருக்கு சக மாணவர்கள், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இன்று 10ஆம் வகுப்பு ரிசல்ட் வெளியான நிலையில், சந்தோஷினி தனது மதிப்பெண்களை செல்போனில் தனது மாற்றுத்திறனாளி தந்தையிடம் மகிழ்ச்சியோடு காட்டும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications